• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லெபனான் மீது இஸ்ரேல் தரைவழி படையெடுப்பு -  கனடா , பிரான்ஸ் எச்சரிக்கை

லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஒரு பெரும் தரைவழிப் படையெடுப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், தெற்கு லெபனானைக் கைப்பற்றுவதற்கான இஸ்ரேலின் திட்டங்களை கனடா "கடுமையாகக் கண்டிப்பதாக" அறிவித்துள்ளது.

அத்துடன் , லெபனானின் இறையாண்மையும் பிராந்திய ஒருமைப்பாடும் "மீறப்படக்கூடாது" என்றும் கனடா எச்சரித்துள்ளது.

இந்த மாதத் தொடக்கத்திலிருந்து இஸ்ரேலியத் தாக்குதல்களால் லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1,072 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 3,000 ஆகவும் உயர்ந்துள்ள சூழலில், லெபனானின் தெற்கு எல்லைக்குள் சுமார் 30 கி.மீ (18.6 மைல்கள்) வரையிலான பகுதிகளை ஆக்கிரமித்துத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான இஸ்ரேலின் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப்பகுதிகளிலும், தலைநகர் பெய்ரூட்டிலும் வாரக்கணக்கில் நீடித்து வரும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அதேவேளையில், இஸ்ரேலின் தரைவழிப் படையெடுப்பு நெருங்கி வரும் நிலையில், அனைத்து மட்டங்களிலிருந்தும் மனிதாபிமான நெருக்கடி குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

லெபனான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது "ஒற்றுமையை" வெளிப்படுத்திய கனடாவின் உலக விவகார அமைச்சகம், இப்போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் "சர்வதேச சட்டங்களுக்கு இணங்கச் செயல்பட வேண்டும்" என புதன்கிழமையன்று தெரிவித்துள்ளது.

"பொதுமக்களைப் பாதுகாக்குமாறும், உள்கட்டமைப்புகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அமைதி காக்கும் படைகள் மீதான தாக்குதல்களைத் தவிர்க்குமாறும் அனைத்துத் தரப்பினரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்," என்று அந்த அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

அதேவேளை செவ்வாய்க்கிழமையன்று, பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் எ , தெற்கு லெபனானை ஆக்கிரமிக்கும் தனது திட்டத்திலிருந்து இஸ்ரேல் விலகிக்கொள்ள வேண்டும் என்று கூயதுடன், இஸ்ரேலின் நடவடிக்கை பொதுமக்களின் மீது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.

பெரும் மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதும், நாட்டின் ஏற்கனவே மோசமாக உள்ள சூழலை மேலும் சீர்குலைக்கக்கூடியதுமான இத்தகைய தரைவழி நடவடிக்கைகளிலிருந்து இஸ்ரேலிய அதிகாரிகள் விலகிக்கொள்ளுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்," என்றும் பாரோட் ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அதேவேளை இஸ்ரேலிய எல்லையிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள லிட்டானி நதி வரையிலான தெற்கு லெபனான் பகுதிகளைத் தனது இராணுவம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் என்று இஸ்ரேல் அறிவித்ததைத் தொடர்ந்தே, பிரான்ஸ் மற்றும் கனடாவின் இந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் பேசுகையில், இராணுவம் "லிட்டானி நதி வரையிலான பாதுகாப்பு மண்டலத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்" என்று கூறினார்.

மேலும், இடம்பெயர்ந்த லெபனான் மக்கள், நதிக்குத் தெற்கே அமைந்துள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்ப, "இஸ்ரேலின் வடக்குப்பகுதி மக்களுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை" அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

காசா மீது இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலை போரின் கோர முகத்தை நினைவூட்டும் வகையில் பேசிய காட்ஸ், லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் "ரஃபா மற்றும் பெய்ட் ஹனூன் நகரங்களின் மாதிரியைப் பின்பற்றி வருவதாக"க் கூறினார்.

பாலஸ்தீனியப் பகுதி மீதான போரின்போது, ​​இவ்விரு நகரங்களும் கிட்டத்தட்ட தரைமட்டமாக்கப்பட்டன. திங்களன்று, இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், தெற்கு லெபனானை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாகத் தன்னுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, இன்னும் ஒரு படி மேலே சென்றார்; இஸ்ரேலின் "எல்லைகளை மாற்றியமைப்பது" அவசியம் என்று அவர் கூறினார்.

"நான் இங்கே மிகத் திட்டவட்டமாகக் கூறுகிறேன்... ஒவ்வொரு அறையிலும், ஒவ்வொரு விவாதத்திலும் கூட: புதிய இஸ்ரேலிய எல்லையாக 'லிட்டானி' நதியே அமைய வேண்டும்," என்று அவர் ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.

தெற்கு லெபனான் மீது படையெடுப்பதற்கான இஸ்ரேலின் ஏற்பாடுகளில், லிட்டானி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலங்கள் மீதும், இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லைக்கு அருகில் உள்ள லெபனான் வீடுகள் மீதும் குண்டுவீசுவது ஆகியவை அடங்கும்.

நாட்டின் தெற்குப் பகுதிக்கு மிக முக்கிய இணைப்பாகத் திகழும் 'காஸ்மியே' பாலம் மீது ஞாயிறன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலை, லெபனான் அதிபர் ஜோசப் அவுன், "தரைவழிப் படையெடுப்பிற்கான ஒரு முன்னறிவிப்பு" என்று வர்ணித்தார்.

லெபனான் மீது இஸ்ரேல் சமீபத்தில் நடத்திய தாக்குதல்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக, அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருப்பதை லெபனான் அரசு ஊடகங்கள் புதன்கிழமை அதிகாலையில் மேற்கோள் காட்டின. தெற்கு நகரமான 'அட்லூன்' மீது "இஸ்ரேலிய எதிரிப் படைகள் நடத்திய தாக்குதலில்" நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், 'மியே மியே' அகதிகள் முகாமில் உள்ள ஒரு குடியிருப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் இருவர் கொல்லப்பட்டு, நால்வர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்குப் பகுதியிலேயே அமைந்துள்ள 'ஹப்பூஷ்' நகர் மீது இஸ்ரேல் முன்னதாக நடத்திய மற்றொரு தாக்குதலில், குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டு, 18 பேர் காயமடைந்தனர். வடக்கு இஸ்ரேலில் மீண்டும் மீண்டும் ஒலித்த வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிகளால் மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்குள் தஞ்சமடைந்த நிலையில் லெபனானிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட் தாக்குதலில் செவ்வாயன்று ஒரு பெண் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Leave a Reply