மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் - குடும்பங்களுக்கு நெருக்கடி- UK பிரதமர் கவலை
தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகப் பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சாதாரண குடும்பங்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளைத் தான் உணர்ந்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல்கள் காரணமாக, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என பிரதமர் எச்சரித்துள்ளார்.
இது பொதுமக்களின் வாழ்க்கைச் செலவை மேலும் உயர்த்தும் காரணியாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் வீட்டு வரவு-செலவுத் திட்டத்தைப் பாதுகாக்கவும், அதிகரித்து வரும் செலவினங்களைக் குறைக்கவும் தமது அரசாங்கம் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக அவர் உறுதியளித்தார்.
இந்த நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் உடன்படிக்கையே சிறந்த தீர்வாக அமையும் என பிரதமர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இராஜதந்திர ரீதியிலான தீர்வு எட்டப்படுவதன் மூலமே உலகளாவிய ரீதியில் விலைவாசி உயர்வதைத் தடுத்து, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும் எனவும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.






















