எம்.ஜி.ஆர். போட்ட ஆர்டர்... -இயக்குநர் சேரன்
சினிமா
எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில் ஆரி அர்ஜூனன் நடிப்பில் மர்மங்கள் நிறைந்த திரில்லராக உருவாகி உள்ள படம் '4த் ப்ளோர்'. மனோ கிரியேஷன் ராஜா தயாரித்துள்ள இந்த படம் வருகிற 27-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநர்கள் சுசீந்திரன், விஜய் மில்டன், நடிகர் பரத், சேரன், பிரஜின், சுப்ரமணிய சிவா, இசை அமைப்பாளர் தரன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சேரன் பேசியதாவது:-
குடும்பத்தில் இருந்து பணத்தை எடுத்து சினிமா தாகத்தில் இங்கு கொண்டு போடுகிற பணத்தை மீட்டு எடுப்பதற்கு தயாரிப்பாளருக்கு வழி இருக்கிறதா? என்றால் இல்லை. மனசாட்சியை அடகு வைத்துக் கொண்டு தயாரிப்பாளரை தெரிந்தே குழிக்குள் தள்ளுகிறோமா? என்றால் ஆமாம். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். நம்ம ஊரில் டப்பிங் படங்கள் நிறைய வந்து கொண்டிருந்தது. அப்போது தமிழ் படங்கள் காணாமல் போகிற வாய்ப்பு உருவானது. எல்லோரும் ஜாக்கிசான் தமிழ் பேசுவதை பார்க்க தொடங்கினோம். எம்.ஜி.ஆர். என்ன பண்ணினார் என்றால் கூப்பிட்டு ஒரு ஆர்டர் போட்டார். எந்த திரையரங்கம் என்றாலும் கண்டிப்பாக 90 நாட்கள் தமிழ் படங்கள் போட வேண்டும். அப்படி போடவில்லை என்றால் லைசென்ஸ் ரத்து என்றார். அதுபோல் இன்று சிறுபடங்களுக்கு 3 மாதங்கள் ஒதுக்கி கொடுங்கள். அது எந்த 3 மாதம் என்றாலும் பரவாயில்லை.
9 மாதங்கள் பெரிய படங்கள் போட்டு கொள்ளுங்கள். சிறு படங்கள் வெளியான நேரத்தில் பெரிய படங்கள் வரக்கூடாது. 3 மாதத்தில் 72 சிறுபடங்கள் ரிலீசாகும். தயாரிப்பாளர்கள் வாழ்வார்கள். இதை அனைவரும் சேர்ந்து அரசிடம் தயக்கமில்லாமல் முறையிட வேண்டும். படத்தின் கதாநாயகனான ஆரி என் மாணவர். இந்த படம் அவருக்கு ஒரு அடையாளமாகவும் நம்பிக்கையாகவும் அமைய வேண்டும் என்றார்.























