• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பேய் மழைக்கு மூழ்கிய துபாய் - சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலநிலை மோசமடைந்துள்ள நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிரத்தன்மை கொண்ட அபாயகரமான காலநிலை முன்னறிவிக்கப்பட்டதை அடுத்து, குடியிருப்பாளர்களை மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.
  
மேலும், சில பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கையும், சில பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கையும் குறிப்பிட்ட சில பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை இரவு தொடங்கி இடைவிடாத மழையும் தொடர் இடி மின்னலும் அங்குள்ள மக்களை உலுக்கியுள்ளது.

புதன்கிழமை வரையில் இந்த நிலை நீடிக்கும் என்றே வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து புதன்கிழமையும் குடியிருப்பில் இருந்தே பணியாற்றும்படி அரசு ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, தனியார் பாடசாலை மாணவர்களுக்கும் குடியிருப்பில் இருந்தே கல்வியை தொடர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் விமான நிலையத்தில் இருந்து சேவை முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் திருப்பி விடப்பட்டு வருகிறது.

45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான சேவையில் தாமதம் அல்லது ரத்து உள்ளிட்டவை புதன்கிழமை பகல் வரையில் நீடிக்கலாம் என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலத்த மழை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த 21 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் தரையிறங்கவிருந்த 24 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

3 விமானங்கள் அருகாமையில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனிடையே, துபாய் விமான நிலையத்திற்கு செல்லும் சாலைகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதிவு செய்துள்ள பயணிகள் முறையானத் தகவலைப் பெற்று பயணத்தை முன்னெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Leave a Reply