• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்

இலங்கை

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீளக்  கட்டியெழுப்பவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்

இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகச் சந்திப்பிலேயே அவர்  இதனைக்  குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவே உள்ளேன்.

சுயலாபம் கருதி ஏதேனும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஊடாக ஆட்சிக்கு வருவதற்கே இன்று பலரும் முயற்சிக்கின்றனர்.

நாடு தொடர்பாகவும் நாட்டுமக்கள் தொடர்பாகவும் அக்கறையில்லாத சிலர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறான சுயலாப அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை.நாம் நாடு தொடர்பில் சிந்தித்தே எனது அரசியல் பயணம் அமைந்தது. இதனால் நான் பலவற்றை இழக்கவும் நேரிட்டது.

இந்த நாட்டின் பொருளாதாரக்கொள்ளையர்கள் என நீதிமன்றத்தினால் நிரூபிக்கப்பட்டவர்கள் இன்று இந்த நாட்டின் பிரதான அமைச்சு பதவிகளை வகிக்கின்றனர்.இவ்வாறானவர்களுடன் ஒருபோதும் அரசியல் பயணத்தை தொடரமுடியாது. கட்சி உறுப்புரிமையையும் நான் விரும்பவில்லை.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க பங்களிப்பு வழங்குவேன். வீழ்ச்சியடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கு சில காலம் தேவைப்படுகின்றது.நான் ஐக்கிய தேசியக்கட்சியை கட்டியெழுப்புவதற்காகவே மீளவும் அரசியலுக்குள் பிரவேசித்துள்ளதாக பலர் கூறுகின்றனர்.

அது தவறான கூற்று.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மொட்டுத்தரப்பினருடன் இணைந்து திசைமாறிபயணிப்பதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில் நான் ஒதுங்கிச்  செயற்பட்டேன்” இவ்வாறு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply