• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பல கோடி சம்பாதித்த தயாரிப்பாளர் குஞ்சுமோன் ஒரு பவுன்சரா? - ஜெண்டில்மேன் உருவான கதை..!

சினிமா

தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற தயாரிப்பாளராக இருந்த கே.டி.குஞ்சுமோன் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில நூறு ரூபாய்க்காக பவுன்சர் வேலை பார்த்துள்ளார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் கேரளாவை சேர்ந்தவர் என்பதும் இளம் வயதிலேயே அவர் முரட்டுத்தனமாகவும் அதே நேரத்தில் நேர்மையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் கள்ளுக்கடையில் பவுன்சராக வேலை பார்த்ததாக தெரிகிறது.

கள்ளுக்கடைக்கு வந்து யாராவது தகராறு செய்தால் அவர்களை தடுத்து நிறுத்துவது அதிக போதையால் மட்டையாகிவிட்டால் அவர்களை தெளிய வைத்து வீட்டுக்கு அழைத்துச் செல்வது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

அப்போதுதான் ஒரு மிகப்பெரிய சினிமா பைனான்சியர் கள்ளுக்கடைக்கு வந்து கள் குடித்துதுவிட்டு மட்டையான போது அவரை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அவரிடம் லட்சக்கணக்கான பணம் இருந்த நிலையில் அந்த பணத்தையும் பாதுகாப்பாக அவரிடம் ஒப்படைத்து, சரியாக இருக்கிறதா என்று எண்ணிக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். அதன் பிறகுதான் அவர் திரையுலகில் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் சம்பாதித்து தயாரிப்பாளராக மாறினார்.

இந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்து கொண்டிருக்கும்போதே ஜென்டில்மேன் என்ற படத்தின் கதையை ஷங்கர் எழுதினார். இதை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற போது தான் ஒரு சினிமா பைனான்சியர், ஷங்கருக்கு கே.டி.குஞ்சுமோனனை அறிமுகம் செய்து வைத்தார்.

அந்த காலத்தில் மலையாளத்தில் சில படங்களை தயாரித்த கே.டி.குஞ்சுமோன், ஜென்டில்மேன் படத்தின் கதை பிடித்து உடன் உடனே ஓகே நான் தயாரிக்கிறேன் என்று கூற இந்த படம் தயாரானது. ஜென்டில்மேன் படத்தின் நாயகனாக நடிக்க முதலில் கமல்ஹாசனை தான் பரிசீலனை செய்திருந்தார் ஷங்கர். ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்காததால் அர்ஜுன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து 1993ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு எழுத்தாளர் பாலகுமாரன் வசனம் எழுதியிருந்தார். இந்த படம் வெளியாகி முதல் மூன்று நாட்கள் சரியாக ஓடவில்லை என்றாலும் அதன் பிறகு பாசிட்டிவ் விமர்சனம் காரணமாக சூப்பர் ஹிட் ஆகியது.

இந்த நிலையில்தான் படம் நன்றாக ஓடியதும் கே.டி.குஞ்சுமோனனை பார்க்க சென்ற ஷங்கர் பேசியதை விட அதிகமாக ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம். ஆனால் அதிக சம்பளம் எல்லாம் தர முடியாது வேண்டுமென்றால் இன்னொரு வாய்ப்பு தருகிறேன் என்று கூறி காதலன் என்ற படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு கொடுத்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே கே.டி.குஞ்சுமோன், ஷங்கர் ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை பெரிதாகியது. ஒரு கட்டத்தில் காதலன் படத்தின் போஸ்டரில் கூட ஷங்கர் பெயரை கே.டி.குஞ்சுமோன் போடவில்லை.

ஆனாலும் இந்த படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றாலும் இந்த படத்திற்கு பிறகு கே.டி.குஞ்சுமோன் சில திரைப்படங்களை எடுத்து நஷ்டம் அடைந்து கொண்டு இருந்த நிலையில் ஷங்கர் இயக்கிய படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற அவர் தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் இயக்குனராக மாறினார்.

ஒரு காலகட்டத்தில் ஒரு லட்ச ரூபாய் அதிக சம்பளம் தர முடியாது என்று கூறிய கே.டி.குஞ்சுமோன், ஷங்கர் எனக்காக ஒரு படம் இயக்கி தர வேண்டும் என்றும் என்னுடைய கடன்களை எல்லாம் தீர்க்க அது ஒன்றுதான் வழி என்று கூறியதாகவும், ஆனால் ஷங்கர் தான் பட்ட அவமானங்களை மறக்காமல் அவருக்கு படம் இயக்க மறுத்ததாகவும் கூறப்பட்டது.
 

Leave a Reply