• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் இந்திய வம்சாவளி தொழில் அதிபர் சுட்டுக்கொலை

கனடா

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கவானாக் நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பூட்டா சிங் கில். கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரான இவர், உள்ளூரில் பிரபல தொழில அதிபராக விளங்கி வந்தார். மேலும் அங்குள்ள பஞ்சாபி சமூகத்தினர் இடையே பெரும் செல்வாக்கு மிக்க நபராக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கவானாக் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் பூட்டா சிங் கில் தனது நண்பர்கள் 2 பேருடன் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பூட்டா சிங் கில் உள்பட 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு பூட்டா சிங் கில்லும், அவரது நண்பரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மற்றொரு நண்பர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Leave a Reply