• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஜினியின் ஜானி - இரட்டை வேடம் என்றாலே ஆள்மாறாட்ட கதை தான்.. ஆனால் இந்த படம் வித்தியாசமானது..!

சினிமா

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ டபுள் ஆக்சனில் நடித்தால், அதில் கண்டிப்பாக ஒரு கேரக்டர் இன்னொரு கேரக்டராக மாறி குழப்பத்தை ஏற்படுத்தும் ஆள்மாறாட்ட கதை அம்சமாக தான் இருக்கும். அந்த காலத்தில் வந்த நாடோடி மன்னன், உத்தமபுத்திரன் படத்தில் இருந்து, இந்த காலத்தில் வந்த ஜீன்ஸ், வாலி,  தடம் உள்பட பல படங்களில் இதே கதையாம்சமாகத்தான் இருக்கும்.

ஆனால் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, தீபா நடித்த  ஜானி திரைப்படம்  ஆள்மாறாட்ட கதைதான் என்றாலும் முற்றிலும் வித்தியாசமான கதையம்சம் கொண்டதாக இருக்கும்.

ஜானி திரைப்படத்தில் ஹீரோ ரஜினி ஒரு பிராடு கேரக்டர். மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதில் கில்லாடி. குறிப்பாக நகைக்கடையில் முதல் காட்சியில் அவர் பணத்தையும் கொடுக்காமல் நகையையும் பெற்று செல்லும் காட்சி ஆரம்பத்திலேயே கைதட்ட வைக்கும்.

அந்த வகையில் அவர் சின்ன சின்ன திருட்டு செய்து கொண்டிருக்கும் நிலையில்  பாடகி ஸ்ரீதேவியை எதேச்சையாக பார்ப்பார். அப்போது அவருடன் காதல் ஏற்படும். ஒரு கட்டத்தில் ஸ்ரீதேவி தன்னை கல்யாணம் செய்து கொள்கிறீர்களா? என்று கேட்கும் போது தனக்கு ஒரு கடமை இருப்பதாகவும் அந்த கடமையை முடித்தவுடன் திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் தெரிவித்திருப்பார்.

இன்னொரு ரஜினி கேரக்டர் சலூன் கடைக்காரர்.  சலூன் கடைக்காரராக இருந்தாலும் அவர் வசதியானவராக இருப்பார். அப்போது தான் அவருடைய வீட்டிற்கு வேலைக்காரியாக தீபா வருவார். ரஜினியின் வசதி வாய்ப்புகளை பார்த்ததும் அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்புவார். ரஜினியும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்த நிலையில்தான் ரஜினியை விட பணக்காரர் கிடைத்தவுடன் தீபா வேறொருவரை திருமணம் செய்து கொண்டு சென்று விடுவார்.

இந்த நேரத்தில் தான்  திருட்டு தொழில் செய்யும் ரஜினியை போலீசார் தேடி வரும் நிலையில், தன்னை துரோகம் செய்த தீபாவை சலூன் கடை ரஜினி கொலை செய்து விடுவார். இப்போது  இந்த கொலைப்பழி திருட்டு ரஜினி மீது விழுந்து அவரை போலீஸ் தேடும். அதேபோல்  திருட்டு ரஜினி செய்த திருட்டுக்களுக்கு சலூன் கடைக்காரர் ரஜினியை போலீஸ் தேடும்.

இருவரும் போலீசிலிருந்து தப்பிக்க ஒளிந்து கொள்ளும் நிலையில்தான் ஸ்ரீதேவி வீட்டுக்கு தற்செயலாக சலூன் கடை ரஜினி செல்வார். அப்போது ஏற்படும் திருப்பம் தான் ரசிகர்கள் யாரும் எதிர்பாராத வகையில் இருக்கும். இதனை அடுத்து இரண்டு ரஜினிக்கும் என்ன ஆனது? ஸ்ரீதேவி தனது காதலர் ரஜினியை திருமணம் செய்து கொண்டாரா? என்பதுதான் பரபரப்பான கிளைமாக்ஸ் ஆகும்.

இந்த படத்தில் திருடனாகவும் சலூன் கடைக்காரராகவும் இரண்டு மாறுபட்ட கேரக்டரில் ரஜினிகாந்த் அபாரமாக நடித்திருப்பார். ஸ்ரீதேவி பாடகியாக சாந்தமான, அதே நேரத்தில் சோகமான கேரக்டரில் நடித்திருப்பார். அதேபோல் தீபா சிறிது நேரமே வந்தாலும் கிளாமரில் கலக்கி இருப்பார். பேராசைக்காரி என்ற கேரக்டரை அப்படியே திரையில்  வெளிப்படுத்தி இருப்பார்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் 5 பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியது. ’ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும், இன்பம் புது வெள்ளம்’ என்ற பாடல்,  ’என் வானிலே ஒரே வெண்ணிலா காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்’ போன்ற பாடல்கள் இன்றும் கேட்கும் வகையில் இருக்கும்.

அதேபோல் இந்த படத்தில் சில வசனங்கள் நச்சென்று இருக்கும். ‘இந்த உலகத்தில் எதை எடுத்தாலும் அதை விட இன்னொன்று பெட்டராக தான் இருக்கும், அதுக்காக நம் மனதை போட்டு குழப்பிக்கொள்ள கூடாது’ என்ற வசனமும் ’அன்பு காட்ட ஆள் இருந்தால் யாருமே அனாதை இல்லை’ என்ற வசனமும் குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில்  டபுள் ஆக்சன் கதையான இந்த படமும் ஒரு ஆள் மாறாட்ட கதையாக இருந்தாலும் மற்ற படங்களில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டது என்பதும் மகேந்திரன் தனது முத்திரையை பதித்திருக்கும் படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply