• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பட்ஜெட்டை விட 800 மடங்கு லாபம்.. எம்ஜிஆர் இயக்கிய முதல் திரைப்படம்..! என்ன படம் தெரியுமா?

சினிமா

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இயக்கத்தில் உருவான ’நாடோடி மன்னன்’ என்ற திரைப்படம் பட்ஜெட்டை விட 800 மடங்கு லாபம் கொடுத்தது என்பது ஆச்சரியத்தக்க தகவலாக உள்ளது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவர் தான் நடிக்கும் படங்களில் உள்ள கதை, திரைக்கதை மற்றும் பாடல்களில் தனது கருத்தை தெரிவித்தார் என்று கூறப்படுவது உண்டு.

அந்த வகையில் திரையுலகில் நல்ல அனுபவம் பெற்ற பிறகு நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தை அவர் கடந்த 1958ஆம் ஆண்டு இயக்கினார். எம்ஜிஆர் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் இதுதான்.

இந்த படத்திற்கு அப்போதே 18 லட்சம் ரூபாய் எம்ஜிஆர் செலவு செய்தார். இந்த படத்தை அவரே தயாரித்து இருந்தார். இந்த படத்திற்காக தன்னுடைய சொத்து அனைத்தையும் விற்று விட்டதாகவும் இந்த படம் வெற்றியடைந்தால் நான் மன்னன், தோல்வி அடைந்தால் நான் நாடோடி என்று படம் ரிலீஸுக்கு  முந்தைய நாள் பத்திரிகையாளர்களிடம் அவர் பேட்டி கொடுத்ததாகவும் கூறப்படுவதுண்டு.

எம்.ஜி.ஆர் இந்த படத்தை இயக்கினார் என்றதும் கிண்டல் செய்தவர்கள் எல்லாம் இந்த படத்தை பார்த்ததும் ஆச்சரியம் அடைந்தனர். மேலும் பிரம்மாண்டமான வெற்றி பெற்ற இந்த படத்தை முறியடிக்க இன்னொரு படம் மிக நீண்ட காலத்திற்கு பின்னால் தான் வந்தது என்றும் அதுவும் எம்ஜிஆர் இயக்கத்தில் உருவான ’உலகம் சுற்றும் வாலிபன்’ தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் பணத்தை தண்ணீர் போல் செலவு செய்ததாகவும், சொந்த படம் என்பதால் அவர் எந்தவிதமான சிக்கனத்தையும் கடைபிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.  மேலும் படப்பிடிப்பின் போது தனக்கு திருப்தி ஏற்படும் வரை எத்தனை டேக் வேண்டாலும் எடுக்கலாம் என்று எம்ஜிஆர் பிடிவாதமாக இருந்ததாகவும் , குறிப்பாக பானுமதி இந்த படத்தில் நடிக்க மிகவும் கஷ்டப்பட்டதாகவும் கூறப்படுவது உண்டு.

இந்த நிலையில் தான் பானுமதியை படத்தின் பாதியிலேயே நீக்கிவிட்டு, அவரது கேரக்டரை சாகடித்துவிட்டு இரண்டாம் பாதியில் சரோஜாதேவியை எம்ஜிஆர் நாயகி ஆக்கியதாகவும் கூறப்படுகிறது.

ஒரு புரட்சிகரமான இளைஞர் மன்னர் ஆட்சியை ஒழித்து மக்களாட்சியை கொண்டுவர வேண்டும் என்று போராடுவார். அவர் தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொண்டு போராடிய நிலையில் சிறையில் அடைக்கப்படுவார். அவரது சிறை அருகிலேயே நாயகியும் இருப்பார்.

இந்த நிலையில் மன்னருக்கு திடீரென மயக்கம் ஏற்பட மன்னரின் முகச்சாயலில் இருக்கும் சிறையில் இருக்கும் நாடோடியை ஒரே ஒரு நாள் மன்னனாக நடிக்கும்படி மந்திரி கேட்டுக் கொள்வார்.  நாட்டின் மன்னனாக அவர் நடிக்கும் போது திடீரென உண்மையான மன்னன் ஆகவே மாறி விடுவார் என்பது தான் கதையின் டுவிஸ்ட்.

இந்த நிலையில் மன்னரை கன்னித்தீவுக்கு வில்லன்கள் கடத்தி விட இளவரசி ரத்னாவையும் அதே வில்லன்கள் கடத்திவிட மன்னரையும் இளவரசியையும் ஹீரோ எப்படி மீட்டார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

மன்னன் மார்த்தாண்டன் மற்றும் புரட்சி வீரன் வீராங்கன் ஆகிய இரட்டை வேடங்களில் எம்ஜிஆர் நடித்திருப்பார்.  நாயகியாக பானுமதி மற்றும்  சரோஜாதேவி நடித்திருப்பார்கள். சந்திரபாபு காமெடி இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது.

மேலும் இந்த படத்தில் வீரப்பா மற்றும் நம்பியார் ஆகிய இருவரும் வில்லன்களாக நடித்திருப்பார்கள். அதிலும் எம்ஜிஆர் உடன் நம்பியார் போடும் வாள் சண்டையின் போது அரங்கம் அதிர்ந்தது.

இந்த படத்திற்கு கவியரசு கண்ணதாசன் வசனம் எழுதியிருந்தார். எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கை அப்போதே அவர் கணித்து வசனங்களை எழுதி உள்ளதாகவும் கூறப்படுவதுண்டு. உதாரணமாக‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய பேர் உண்டு, ஆனால் நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை’ என்ற வசனம், ‘நீங்கள் மாட மாளிகையில் இருந்து மக்களை பார்க்கிறீர்கள் , நான் மக்களுடன்  இருந்து மாளிகையை கவனிக்கிறேன்’ போன்ற வசனம் கவனிக்கத்தக்கது.

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 18 லட்ச ரூபாய் என்ற நிலையில் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது.

மேலும் இந்த படம் முதல் பாதி கருப்பு வெள்ளையாகவும் இரண்டாம் பாதியின் சில நிமிடங்களுக்குப் பின் கலர் படமாகவும் இருக்கும் என்பதால் முதன் முதலில் தமிழில் வெளியான கலர் படம் இந்த படம் தான் என்ற பெருமையும் உண்டு.

மூன்றே கால் மணி நேரம் ஓடும் இந்த படம் ஒரு நிமிடம் கூட போரடிக்காமல் இருந்ததுதான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம்.
 

Leave a Reply