• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை

யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம்  776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களில்  71 பேர் மரணித்துள்ளனர் என வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருபவர்களில் மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், சூலகப் புற்றுநோய், வாய் புற்றுநோய், சுவாசம் தொண்டை பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் , உடல் உள் உறுப்புக்களில் ஏற்படும் புற்றுநோய் என பல வகையான புற்று நோய்கள் இனம் காணப்பட்டுள்ளன.

புற்றுநோயை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளை ஒழுங்காக மேற்கொள்ளும் போது நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தமது மார்பகங்களை சுய பரிசேசனை செய்வதோடு ஏதேனும் கட்டிகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரை நாட வேண்டும். 40-60 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோயை மார்பகங்களில் ஏற்படும் அசாதாரண நிலையை கண்டறியும் மனோ கிராம் சிகிச்சை மூலம் கண்டறியலாம். குறித்த சிகிச்சை யாழ் போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்படுகிறது.

பெண்கள் மாதவிடாய் ஒழுங்கீனம் தொடர்பில் பெண்கள் அவதானமாக இருப்பதோடு கருப்பைக் கட்டி, சூலகப் புற்றுநோய் தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும்.

ஆண்களைப் பொறுத்தவரையில் புகைத்தல் வெற்றிலை போடுதலால் மற்றும் மதுபானம் அருந்துவதால் வாய் மற்றும் ஈரல் புற்று நோய் ஏற்படுகிறது.

யாழ் மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு தை மாதம் தொடக்க டிசம்பர் வரையான காலப்பகுதியில் குடல் புற்றுநோய் காரணமாக 88 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரைப்பை புற்று நோயால் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரல் புற்றுநோயால் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 08 பேர் உயிரிழந்துள்ளனர். சுவாசாப் புற்றுநோயினால் 67 பேர் பாதிக்கப்பட நிலையில் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

மார்பக புற்று நோயினால் 83 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். கருப்பைப் புற்று நோயினால் 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 03 பேர் உயிரிழந்துள்ளனர். கருப்பை கழுத்து புற்று நோயினால் 48 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஆண்களில் சிறுநீர்ப்பை புற்று நோயினால் 10 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குருதிப்பட்டி நோயினால் 37 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆகவே புற்று நோய் தொடர்பில் ஆண் பெண் இருபாலரும் அறிந்திருக்க வேண்டியது கட்டாயமாக காணப்படுவதுடன் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும்” இவ்வாறு வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply