• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளின் பெயர்களை மாற்ற நடவடிக்கை

இலங்கை

சமூகத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை உருவாக்கும் வகையில், முட்டி உடைத்தல் – குருடர்களுக்கு உணவளித்தல் போன்ற சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளின் பெயர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  இந்த வருடத்தின் கடைசி காலாண்டிற்குப் பிறகு, இந்த நாட்டில் பொருளாதாரச் சுருக்கம் குறைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பொருளாதாரமாக மாறும் திறனைப் பெற்றுள்ளோம்.

நுகர்வோருக்கு கட்டுப்படியாகாத வாழ்க்கைச் செலவுக்குத் தீர்வுகளை வழங்குவதே எமது பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

ஆனால் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இம்முறையும் புத்தாண்டை வழமை போன்று கொண்டாட மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வருட புத்தாண்டுக்காக சமுர்த்தி வேலைத்திட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் இணைந்து நாடளாவிய ரீதியில் 1089 புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன.

அதன்போது விசேட தேவையுடையோர் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முட்டி உடைத்தல் – குருடர்களுக்கு உணவளித்தல் என்ற அம்சங்கள் சமூகத்தால் இதுவரை நிராகரிக்கப்பட்டுள்ளன. அதனை எமது அமைச்சும் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதற்கு பதிலாக, அதிர்ஷ்டத்தின் பானையை உடைத்தல் மற்றும் தோழனுக்கு உணவளித்தல் என்ற பெயர்களைப் பயன்படுத்துமாறு ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சமூகத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். மேலும், புத்தாண்டு விழாக்களிலும் விசேட தேவையுடையோருக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம். நாட்டின் சுற்றுலாத்துறை கடந்த காலத்தில் வீழ்ச்சியடைந்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த புதிய வேலைத்திட்டத்தின் காரணமாக இந்த ஆண்டு இதுவரை 635,784 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அதன் மூலம் நாடு 1025 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளது.

10,000 குடும்பங்களுக்கு கிராமத்தில் கோழிப்பண்ணை உற்பத்தி மையங்கள் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மே மாதம் இத்திட்டத்தை ஆரம்பிக்க அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளன என்தைக் கூற வேண்டும்.   அதற்கான கடன்களும் உதவிகளும் வழங்கப்பட உள்ளன. தேயிலை பயிர்ச்செய்கைக்காக 14,000 குடும்பங்களுக்கு தேயிலைச் செடிகளை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.
 

Leave a Reply