வெளியேறிய இஸ்ரேல் ராணுவம் - அடையாளம் தெரியாத வகையில் சிதைந்து போனதாக கான் யூனிஸ் மக்கள் வேதனை
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தியது. காசா முனையின் வடக்குப் பகுதியில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் படிப்படியாக தெற்குப் பகுதியிலும் தாக்குதல் நடத்த தொடங்கியது.
பாலஸ்தீன மக்கள் அதிக அளவில் வசித்து வந்த கான் யூனிஸ் நகர் மீது கடந்த டிசம்பர் மாதம் தாக்குதல் நடத்த தொடங்கியது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், கான் யூனிஸ் மீது தாக்குதல் நடத்தினால்தான் எங்களது நோக்கம் நிறைவேறும் எனக் கூறியது.
சுமார் நான்குமாதம் கடுமையான வகையில் கான் யூனிஸ் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. வான்வழியாக தாக்குதல் நடத்திய நிலையில், தெருத்தெருவாக சோதனை நடத்தி ஹமாஸ் அமைப்பினரை தேடினர். ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதைகளை தேடிப்பிடித்து அழித்தனர்.
ஹமாஸ் அமைப்பினரின் ஆதிக்கம் அதிகமாக உள்ள இடமாக கான் யூனிஸ் கருதப்பட்டது. இங்குள்ள வீடுகள், கட்டடங்கள் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் தரைமட்டமாகின.
தற்போது இஸ்ரேல் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் உதவிப்பொருட்கள் வழங்கிய நபர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதில் சிலர் உயிரிழந்தனர். இதனால் அமெரிக்கா தனது கண்டனத்தை வெளிப்படுத்தியது. இஸ்ரேல் ராணுவம் பொதுமக்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தது.
இந்த நிலையில் யூனிஸ் கான் நகர் மீது தாக்குதல் நடத்தியதற்கான நோக்கம் முடிவடைந்து விட்டது. இதனால் கான் யூனிஸ் நகரில் இருந்து வெளியேறுகிறோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனால் கான் யூனிஸ் நகரில் வசித்த வந்த மக்கள் தங்களுடைய சொந்த நகருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். ஆனால் கான் யூனிஸ் நகர் தனது அடையாளத்தை இழந்துள்ளது. கட்டடங்கள் இருந்த இடம் தெரியாத வகையில் சிதைக்கப்பட்டுள்ளன.
வீடுகள் இருந்த சுவடே தெரியவில்லை என நேரில் சென்று பார்த்த பாலஸ்தீனர்கள் தங்களது வேதனைகளை தெரிவித்துள்ளனர்.
கான் யூனிஸ் நகரில் இருந்து வெளியேறிய முகமது அப்தெல்-கானி தற்போது கான் யூனிஸ் நகர் திரும்பியுள்ளார். அவர் "பல பகுதிகள் குறிப்பாக நகரின் மையப் பகுதிகள் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறியுள்ளது. என்னுடைய வீடு மற்றும் என்னுடைய வீடு அருகில் இருந்த வீடுகள் தரைமட்டமாகியுள்ளன" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நஜ்வா அயாஷ் என் பெண் "தனனுடைய குடும்பம் வசிக்கும் 3 மாடிக்கு செல்ல முடியவில்லை. ஏனென்றால் படிகள் அனைத்தும் இடிந்துள்ளன" எனத்தெரிவித்துள்ளார்.
பாசல் அபு சாசர் "அவர்கள் (இஸ்ரேல் ராணுவம்) எதையும விட்டுச் செல்லவில்லை. வாழ்வதற்கான ஏதும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.