• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அம்பானியால் கேள்விக்குறியாகும் தமிழ் திரை உலகம்

அருவி படத்தில் வரும் வசனத்தைப் போல், சமூகத்தில் இருக்கின்ற ஒரே விதி “பணம்”, பணம் இருக்கிறவர்கள் வலிமையானவர்கள். வலிமையானவர் வகுத்ததே நீதி! என்பது போல் சுற்றி வருகிறது இந்த உலகம். புதிதாக படங்கள் ரிலீஸ் ஆனாலும் அதனை, மக்களாகிய நாம் “எப்ப பாக்கணும்! எங்க பாக்கணும்!” என்பது போன்ற முடிவுகளை கார்ப்பரேட் தீர்மானித்து விடுகின்றனர். ஒரே ஒரு சாய்ஸை வைத்து அதை மட்டுமே தேர்ந்தெடுக்கும் உரிமையை நம்மிடம் கொடுத்து விடுகின்றனர் இந்த பலவான்கள்.
  
சாமானியர்களுக்கு தான் இந்த நிலைமை தொடர்கிறது என்றால், மெத்த படித்த மேதாவிகளுக்கும், திரைத்துறையில் பெயர் வாங்கி இருக்கும் பிரபலங்களுக்கும் இதே நிலைமை தொடர்வது தான் அவலத்திலும் அவலம்.

இந்தியாவின் முன்னணியில் இருக்கும் தனியார் நிறுவனத்தின் ஆதிக்கத்தில் தான், திரைப் பிரபலங்களும், திரைத்துறையும் உள்ளது என்பது 100% மறுக்க முடியாத உண்மை.

நம் நாட்டிலேயே வர்த்தகத்தில் கோலோச்சி இருக்கும் ஜியோ நிறுவனத்தின் உரிமையாளர் அம்பானி வீட்டு திருமண விருந்து தான் இந்தியாவின் ஹைலைட். மொத்த நட்சத்திரங்களும் கலந்துகொண்டு அமர்க்களப்படுத்தி இருந்தனர்.

தற்போது நம் தமிழ் நடிகர்கள் இருவர், இந்த ஜியோ நிறுவனத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது என்னவென்றால் திரையில் வெளியாகும் திரைப்படங்கள் 4 வாரங்களுக்குப் பின்பு ஓடிடி தளத்தில் வெளியாகும்.

ஜெயிலர் புகழ் வசந்த் ரவி நடித்த “பொன் ஒன்று கண்டேன்” இயக்குனர் பிரியா இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்த ரஜினியின் மகனான வசந்த் ரவி மற்றும் அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி நடித்த திரைப்படம் தான் பொன் ஒன்று கண்டேன்.

படம் நல்லா வந்திருக்குது என படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்த நடிகர்களும் சினிமா ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டிய நிலையில் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல், நேரடியாக கலர்ஸ் தமிழில் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கு முழுமுதற் காரணம் ஜியோ ஸ்டூடியோஸ் தானாம்.

இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ், இதன் உரிமையை கலர்ஸ் சேனலுக்கு விற்று உள்ளனர்.

இதன் பிரமோவை ஆன்லைனில் பார்த்த நடிகர்கள் வசந்த் ரவி மற்றும் அசோக் செல்வன் இருவரும் ஷாக்கான நிலையில் வலைதளத்தில் காட்டமான பதிவை பதிவு செய்துள்ளார்.

படத்தின் ரிலீஸில் நடிகர்களாகிய நாங்கள் தலையிட முடியாது. இது தயாரிப்பாளர்களின் உரிமை தான் என்றாலும், படத்தில் கஷ்டப்பட்டு நடித்ததற்காகவாவது எங்களிடம் ஒரு தகவல் கூறி இருக்கலாம் என்று ஆதங்கப்பட்டார் வசந்த் ரவி. 
 

Leave a Reply