வெள்ளித்திரையை ஆண்ட பெண் கதாபாத்திரங்களின் வரிசையில் - சுபத்ரா!
சினிமா
ஒருதலைராகம் திரைப்படத்தில் நடிகை ரூபா ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர்தான், 'சுபத்ரா'.
இதில் நடித்த அனைவருமே புதுமுகங்கள்தான்.ஒரு சிலரைத் தவிர.
இந்த சுபத்ரா என்கிற பெயரே ரொம்பவும் அரிதுதான்.எனக்குத் தெரிந்து என்னைச் சுற்றியுள்ளவர்கள் எவருக்கும் இப்பெயரில்லை என்றே சொல்லலாம்.
'சுபத்ரா',என்கிற பெயர் எப்படி அரிதோ,அதே போல் இந்தக் கேரக்டரும் தமிழ்சினிமாவில் அரிதான ஒன்றுதான்.அதனால்தன் தேடிப்பிடித்து அருமையான ஒரு பெயரை இந்தக் கேரக்டருக்கு TR வைத்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
ஒருவன் இவளை உயிருக்கு உயிராக நேசிப்பதை அறிந்தும் தன்னுடைய தாயின் அனுபவத்தை வைத்து அவனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறாள்;நிறைய யோசிக்கிறாள்.
தோளை மூடிய சேலை,குனிந்த தலை நிமிராமை,அமைதி,அதிர்ந்து பேசாத குணம் -என இருப்பவள்தான் சுபத்ரா.அவளுக்கு இருப்பதோ ஒரே தோழி.அவளிடமும் நாலு வார்த்தை பேசுவதோடு சரி.
எல்லாவற்றிற்கும் ஒரு end card உண்டுதானே!
மனசுலேயே பூட்டி வைத்திருந்த அவளுடைய காதலை சொல்வதற்கும் ஒரு நேரம் வந்தது.
கல்லூரியின் கடைசி நாள்.ராஜாவின் நண்பன் சேகர் கல்லூரியின் பிரிவு உபச்சார விழாவில் கதை ஒன்றை உருக்கமாக கூறி அவளுடைய நெஞ்சுக்கூட்டை உடைக்கிறான்.கதறுகிறாள் சுபத்ரா.
மறுநாள்,தீர்மானமான ஒரு முடிவுக்கு வருகிறாள்.மூன்று வருடங்களாக மனதுக்குள் பூட்டி வைத்திருந்த காதலை எல்லாம் கொட்டி அழ, காதலனைத் தேடி ஓடி வருகிறாள்.
ரயிலின் ஜன்னலோரும் உட்கார்ந்து இருக்கும் ராஜாவின் அருகில் உட்கார்ந்து பேசுகிறாள்...பேசுகிறாள்...பேசிக்கொண்டேயிருக்கிறாள்.ஆனால்,
கேட்பதற்குத்தான் அவன் இப்போது உயிரோடில்லை.
அவன் உயிரோடு இருக்கும் வரையில் அவள் வரவேயில்லை.அவள் அவனைத் தேடி வரும் பொழுது அவன் உயிரோடில்லை.
'ஒருதலைராகம்',1980-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.1980-க்கு முன்பு வரை சுபத்ராவின் கதாபாத்திரம் போன்ற ஒரு கதாபாத்திரத்தை நாம் பார்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
1996-ஆம் ஆண்டு, 'லவ்டுடே',என்று ஒரு படம் வந்தது.விஜய் நடித்தது.Super hit ஆன திரைப்படம்.இப்படத்திலும் நாயகன் நாயகியை கெஞ்சிக் கூத்தாடியும் சற்றும் இறங்கி வரமாட்டாள்.அவனுடைய தந்தை இறந்த பிறகு தன்னால்தான் அவனுக்கு இந்த நிலை என்பதை உணர்ந்து அவனை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து அவனை நோக்கி வருவாள்.ஆனால்,இப்போ அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
ஆனால்,சுபத்ராவின் கதாபாத்திரம் போன்று சொல்ல முடியாது.சற்று ஒட்டி வரும்,அவ்வளவுதான்.சுபத்ரா அவனை விரும்பியும் ஏற்றுக்கொள்ள முடியாத குடும்ப நிலை.லவ்டுடே நாயகியோ அவனை ஆரம்பத்திலிருந்தே வெறுப்பவள்.Pre-climax-ல்தான் அவனை ஏற்றுக்கொள்கிறாள்.ஆனால்,அவன் இப்போ அவளுடைய காதலை ஏற்க மறுக்கிறான்.
'ஒருதலைராகம்',படத்தின் மாபெரும் வெற்றிக்கு இப்படி வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் மட்டுமே அன்றைக்கு இருந்த ரசிகர்கள் ,அக்கதாபாத்திரத்தை மிகுந்த ஆர்வத்தோடு பார்த்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.க்ளைமாக்ஸ் முடிந்தப் பிறகு அக்கதாபாத்திரத்தை திட்டியவர்களும் பலபேர்.அதுதான் அக்கதாபாத்திரத்திற்கான விருது.
இக்கதாபாத்திற்கு பொருத்தமாக ரூபாவின் முகம் அமைந்ததும் சிறப்புதான்.அதற்கேற்றவாறு இயல்பான நடிப்பும் உடனிருந்தது.
இன்றைய தலைமுறையினர் இக்கதாபாத்திரத்தை பார்த்தால் இப்படி கூட ஒரு பொண்ணு இருக்க முடியுமா என்று ஆச்சர்யப்படத்தான் செய்வார்கள்.காரணம்,இன்றைய காதல் fastfood மாதிரி.
பார்த்தேன்;பேசினேன்;பழகினேன்;
புணர்ந்தேன்;விலகினேன்.இதுதான் இன்றைய காதல் .விதிவிலக்குகள் சொற்பமே!Love is take it policy என்கிற கலாச்சாரத்திற்குள் வந்து விட்டது.
இன்றைய நவீன காதலுக்குள்ளும் விதிவிலக்கான கடந்த வார காதல் ஒன்றை சொல்கிறேன்.
வங்கதேசப் பெண் ஒருத்தி முகநூலில் ஒருவனுடன் பழக்கமாகி சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து காதலனை கைப்பிடித்து கல்யாணமும் செய்தப்பிறகு, போலீஸீக்கு தகவல் போய் விசாரணை நடந்து கொண்டிருக்கு.
நான்,சாதாரணமாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து விட்டாள் என எழுதிவிட்டேன்.ஆனால்,அதற்காக அவள் கடந்து வந்த பயணமானது மிகுந்த ஆபத்தானது.புலிகள் நடமாடும் காட்டைக் கடந்திருக்கிறாள்.நீந்தி வந்திருக்கிறாள்.இப்படி அவளுடைய தைரியமான சாகசம் ஏராளம்.
நிறைவாக,'சுபத்ரா',ஆச்சர்யமானவள்;விதிவிலக்கானவள்.
'சுபத்ரா',திரையில் என்றென்றும் ஒளிர்வாள்.
இந்தப் படத்தை தயாரித்தது E.M.இப்ராஹிம் அவர்கள்.
டைட்டில் கார்டில் தயாரிப்பு-இயக்கம் என தயாரிப்பாளரின் பெயர்தான் வரும்.
மூலக்கதை-வசனம்:ராஜேந்திரன் என்றும்,பாடல்கள்-இசையாக்கம் :ராஜேந்திரன் என இவருக்கு இரண்டு டைட்டில் கார்டு போடுவார்கள்.பின்னணி இசை:A.A.ராஜ் என ஒரு டைட்டில் கார்டு வரும்.இவர் யார் என்றே எனக்குத் தெரியலே.இந்தப் படத்திற்குப் பிறகு இவர் ஏதாவது படங்களில் பணியாற்றியுள்ளாரா என்பதும் தெரியலே.
திரைக்கதை:மன்சூர் கிரியேஷன்ஸ் கதை இலாகா என ஒரு டைட்டில் கார்டு வரும்.
இந்தப் படம் ரிலீஷ் ஆனப்பிறகு டி.ராஜேந்தர் படமே பார்க்கவில்லை என்றும் சொல்வார்கள்.
தான் யார் என்பதை அடுத்தடுத்த படங்களில் நிரூபித்து சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து தொடர்ந்து வெற்றிப்படங்களையே கொடுத்து ரஜினி,கமலுக்கும் போட்டியாளராக உயர்ந்தார்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் துணிந்து அக்கட்சியில் சேர்ந்து நட்சத்திர பேச்சாளராக உயர்ந்தார்.படங்களையும் வெற்றி பெறச் செய்தார்.
இவர் தயாரித்த படங்களில் உயிருள்ள வரை உஷாவும்,மைதிலி என்னைக் காதலியும் இவருக்கு பெரும் செல்வத்தை கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
திரைத்துறையில் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக இவரைத்தான் சொல்லணும்.
சே மணிசேகரன்