• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கணக்கில் மீதி வைக்க வில்லையடியோ …

சினிமா

மயானத்தில் பாடும் பாடலைப் பொருத்தவரை துக்கம் ரொம்பவே தொண்டையை அடைக்கும். ஆனால் கவியரசு கண்ணதாசன் வரிகள், கே.வி.மகாதேவன் இசை இந்த மயானப்பாடலை ஆடிப் பாடி கொண்டாட வைக்கிறது.

அதைப் பற்றிப் பார்ப்போம். தேவர் பிலிம்ஸின் முகராசி படத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு என்று ஆரம்பிக்கும் பாடல் தான் அது. 

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு… இங்கே கொண்டு வந்து போடும்போது நாலு பேரு… கொண்டாடும்போது ஒரு நூறு பேரு. உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு? என அழகாகச் சொல்லியிருப்பார் கவியரசர். இதில் 3 பேரைக் குறிவைத்து இருப்பார் கண்ணதாசன்.

தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான். இவன் தேராத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான். பிறர் நோய் தீர்க்கும் வைத்தியன் தன் நோய் தீர்க்க மாட்டாமல், பாய் போட்டுத் தூங்குதப்பா, உயரும் பேயோடு சேர்ந்ததப்பா… என அழகாக எடுத்துரைக்கிறார் கவியரசர். 

அடுத்து ஜோதிடர். இவர் எல்லாருக்கும் ஆயுளைத் தீர்க்கமாகச் சொல்வார். ஆனாலும் இவருக்கும் அந்த நாள் வரும் என்கிறார்.

கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்வார். எந்தக் காரியத்தைச் செய்வதற்கும் தேதி குறிப்பார். நல்ல சேதி சொல்லும் ஜோசியருக்கும் நீதி சொல்லும் சாவு வந்து தேதி வைத்து விட்டதடியோ, கணக்கில் மீதி வைக்க வில்லையடியோ … எவ்வளவு அழகான வரி என்று பாருங்கள்.

மூன்றாவதாக பெரிய பணக்காரனைப் பற்றிச் சொல்கிறார். அதாவது, பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான். அந்தப் பட்டயத்தில் கண்டது போல வேலி எடுத்தான். அதில் எட்டடுக்கு மாடி வைத்து கட்டடத்தைக் கட்டி விட்டு, எட்டடிக்குள் வந்து படுத்தான். மண்ணைக் கொட்டியவன் வேலி எடுத்தான். எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் அவனும் கடைசியில் எட்டடி குழிக்குள் தான் அடங்குகிறான் என்று சொல்லியிருக்கிறார்.

இந்தப் பாடலை எழுதும்போது கவியரசருக்கு 38 வயது தான் இருக்கும். அவர் ஒரு சித்தர் மனநிலையில் இருந்தால் தான் இப்படி எழுத முடியும்.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply