ரஜினியின் பெருந்தன்மை
சினிமா
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலமாக தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை நடத்திக் கொண்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். பல மொழிகளில் எத்தனையோ சூப்பர் ஸ்டார் இருந்தாலும் ரஜினிக்கு இருக்கும் அந்த க்ரேஷ் வேறெந்த நடிகருக்கும் கிடையாது. இந்திய அளவில் பெருமையாக பேசப்படும் நடிகராகவே ரஜினி பார்க்கப்படுகிறார்.
இதற்கு ஒரு சிறந்த உதாரணம் சமீபத்தில் நடந்த அம்பானி வீட்டு ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியை கூறலாம். உலகெங்கிலும் உள்ள எத்தனையோ பிரபலங்கள் வந்த நிலையில் தமிழ் நாட்டில் இருந்து ரஜினிக்கும் அட்லீக்கும்தான் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்தளவுக்கு ரஜினியின் புகழ் பரவியிருக்கிறது. 73 வயதை கடந்தும் ரஜினிக்கும் இருக்கும் மாஸ் இன்னும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.
இந்த நிலையில் பிரபல சினிமா போட்டோகிராஃபர் ரவி சங்கர் ரஜினியை பற்றி ஒரு சில தகவலை பகிர்ந்தார். ரஜினியிடம் ரவிசங்கர் அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார். அதாவது ரவிசங்கரின் அம்மாவும் கூடவே ஒரு சிறு குழந்தையும் நடந்து போய்க் கொண்டிருந்தார்களாம். அப்போது அவர்களை கடந்து ஒரு நடிகர் காரில் செல்ல உடனே அந்த குழந்தை நடிகரின் பெயரை குறிப்பிட்டு அவன் போறான் என்று சொல்லியிருக்கிறது.
உடனே அந்த நடிகர் காரில் இருந்து இறங்கி வந்து அந்தக் குழந்தையையும் அந்த அம்மாவையும் சத்தம் போட்டு போனாராம். இதை குறிப்பிட்டு ரவிசங்கர் ரஜினியிடம் ‘அந்த நடிகரின் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்வீர்கள்?’ எனக் கேட்டாராம். இதை கேட்டதும் ரஜினி அசந்துவிட்டாராம். ஆனால் இதற்கு பதிலளிக்கும் விதமாக ரஜினி அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார்.
ஆரம்பத்தில் ரஜினி மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவருடைய மன நிலையும் பாதிக்கப்பட்டு இருந்த சமயத்தில் காரில் போகும் போதெல்லாம் வழிப்போக்கர் ஒருவர் ரஜினியை பார்த்து தினந்தோறும் கிண்டலடித்தே பேசிக்கொண்டிருப்பாராம். பல நாள்கள் அதை கவனித்து வந்த ரஜினி ஒரு நாள் காரில் இருந்து இறங்கி நேராக அந்த நபரின் அருகில் சென்று அவர் தோளின் மேல் கையை போட்டுக் கொண்டாராம்.
அதன் பிறகு அவரை ரஜினி நண்பராக்கியிருக்கிறார். இதை பார்த்ததும் அந்த நபர் கண்ணீர் விட்டு அழுதாராம். அவர் செய்த தவறை எண்ணி மன்னிப்பும் கேட்க மறு நாளில் இருந்து என்ன தலைவா! வணக்கம் என சொல்ல ஆரம்பித்தாராம். இந்த சம்பவத்தை ரஜினி கூறியதில் இருந்தே ரவிசங்கருக்கு ரஜினியின் பெருந்தன்மை புரிந்து விட்டது என ஒரு பேட்டியில் ரவிசங்கர் கூறினார்.