• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என்ன படம் இது..? அப்செட் ஆன ரஜினி.. 

சினிமா

என்ன படம் இது..? அப்செட் ஆன ரஜினி.. வெளியேறிய ஹீரோயின்.. ஆனாலும் ஹிட் ஆகி ரஜினிக்கு விருது வாங்கித் தந்த அபூர்வம்!

ரஜினியை சூப்பர் ஸ்டாராகவும், இந்திய சினிமாவின் வசூல் மன்னனாகவும் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் ரஜினிக்குள் இருக்கும் ஒரு சிறப்பான நடிகனை வெளிக் கொண்டு வந்தவர்கள் மூவர். முதலாமவர் கே. பாலச்சந்தர். முதன்முதலில் வாய்ப்புக் கொடுத்து அபூர்வ ராகத்தில் அறிமுகப் படத்திலேயே கவனிக்க வைத்தவர். இரண்டாமவர் யதார்த்த சினிமாவின் ஜாம்பவான் என்று போற்றப்படும் மகேந்திரன். முள்ளும் மலரும் என்ற படத்தில் ரஜினி, ஷோபா வைத்து மீண்டும் ஒரு பாசமலரை யதார்த்தமாகச் சினிமாவில் காட்டியவர்.

முள்ளும் மலரும் படத்தைப் பார்த்தால் ரஜினியின் உன்னத நடிப்பை அசத்தலாக வாங்கியிருப்பார் இயக்குநர் மகேந்திரன். தங்கையை நினைத்து உருகும் காட்சிகளில் நம் கண்களையே குளமாக்கி விடுவார் ரஜினி. மூன்றாவதாக அவரின் நடிப்பை போற்றிய படம் ஆறிலிருந்து அறுபது வரை. கமர்ஷியல் படங்களின் நாயகன் என்று போற்றப்படும் எஸ்.பி. முத்துராமனிடமிருந்து வந்த அபூர்வ படைப்பு.

ரஜினியின் கேரியரில் ஆறிலிருந்து அறுபதுவரை படம் முக்கியமான ஒன்று. தனது இயல்பான நடிப்பில் அப்போதிருந்த குடும்பங்களின் நிலையைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் ரஜினி. ஆனால் இப்படத்தினை இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் எடுக்கும் போது ரஜினிக்கு திருப்தி இல்லையாம். இந்தப் படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டாலும், ஒரு மூத்த சகோதரன் தனது இளையவர்களுக்கு இத்தனை நன்மைகள் செய்த பிறகும் அவன் மீது அன்பில்லாமல் இருப்பார்களா? இது சரியாக வருமா என்று ரஜினி முத்துராமனிடம் தொடர்ந்து வாதிட்டு வந்திருக்கிறார். முத்துராமன் எவ்வளவோ விளக்கியும் ரஜினி சமாதானமாகவில்லை.

இந்நிலையில் நீங்க சண்டையை முடிச்சிட்டு வாங்க என்று அப்படத்தின் நாயகி படாபட் ஜெயலட்சுமி பலமுறை படப்பிடிப்புதளத்திலிருந்து வெளியே சென்றிருக்கிறார். கடைசியில் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் தலையிட்டு, எங்க மேல நம்பிக்கை இருக்கில்ல… அஞ்சாயிரம் அடி எடுத்துப் பார்ப்போம். உனக்குப் பிடிக்கலைன்னா இந்த கதையையே விட்டுட்டு வேற படம் பண்ணுவோம் என்று ரஜினியிடம் சொல்லியிருக்கிறார்.

அரைகுறை மனதுடன் தொடர்ந்து நடித்த ரஜினி ஐந்தாயிரம் அடி படம் முடிந்ததும் பிரிண்ட் எடுத்து போட்டு பார்த்திருக்கிறார்கள். ரஜினிக்கு ஆத்ம திருப்தி. படம் சூப்பரா வரும் என்று முத்துராமனையும், பஞ்சு அருணாச்சலத்தையும் கட்டிப் பிடித்திருக்கிறார். இந்தப் படத்துக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருது ரஜினிக்கும், சிறந்த இயக்குனர் விருது எஸ்.பி. முத்துராமனுக்கும் கிடைத்தது. 1979-ல் வெளியான இந்தப் படம் ரஜினியின் அபார நடிப்பிற்காக ஹிட் ஆகியது.
 

Leave a Reply