• Welcome to TamilsGuide
செய்திகள் 1

16 வயதினிலே படத்துக்கு முன் பாரதிராஜா இயக்கவிருந்த படம்!.. ஹீரோயின் யார் தெரியுமா?..

சினிமா

தமிழ் சினிமாவில் புதுமையான இயக்குனராக நுழைந்தவர் பாரதிராஜா. ஸ்டுடியோவுக்குள் மட்டுமே நடந்து வந்த திரைப்படங்களின் படப்பிடிப்பை வயல் வரப்புக்கு மாத்தியவர் இவர்தான். இவர் வந்த பின்னரே கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை, கோபம், அன்பு, பாசம், காதல் என எல்லாவற்றையும் ரசிகர்கள் பார்க்க முடிந்தது.

திரையுலகில் ஒரு படத்திற்கான முழு படப்பிடிப்பையும் கிராமபுறங்களுக்கு சென்று இயக்கியவர் பாரதிராஜா மட்டுமே. அவருக்கு பின்னரே சில இயக்குனர்கள் அந்த வேலையில் இறங்கினார். இவர் முதலில் இயக்கிய பதினாறு வயதினிலே திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

ஏனெனில் அப்படி ஒரு கதை, திரைக்கதையை ரசிகர்கள் அதற்கு முன் பார்த்திருக்கவில்லை. அந்த படத்தில் நடிகர்களின் நடிப்பும், பாடல்களும், பின்னனி இசையும் ரசிகர்களை கட்டிப்போட்டது. பரட்டையாக ரஜினியும், சப்பாணியாக கமலும், மயிலாக ஸ்ரீதேவியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த படத்திற்கு பின் கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், மண் வாசனை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது உள்ளிட்ட பல திரைப்படங்களை பாரதிராஜா இயக்கி தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றினார். பாரதிராஜா வந்த பின் பல இயக்குனர்களும், நடிகர்களும் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முடியாமல் தடுமாறினார்கள். அதில், எம்.ஜி.ஆரும் ஒருவர் என்பது பலருக்கும் தெரியாது. ஒரு மேடையில் அவரே இதை கூறினார்.

உண்மையில் பாரதிராஜா இயக்க வேண்டிய முதல் படம் பதினாறு வயதினிலே கிடையாது. அன்னக்கிளி செல்வராஜ் எழுதிய ஒரு கதையை அவர் படமாக எடுக்க முடிவானது. ஒரு தயாரிப்பாளரை பிடித்து சம்மதமும் வாங்கினார். அந்த படத்தில் முத்துராமனையும், ஜெயலலிதாவையும் நடிக்கவைப்பது என முடிவானது. ஜெயலலிதாவை சந்தித்து பாரதிராஜா கதையும் சொன்னார்.

கதையை கேட்ட ஜெயலலிதா ‘நீங்கள் சொன்னது போல அப்படியே படமாக எடுத்தால் கண்டிப்பாக இப்படம் வெற்றி பெறும்’ என சொல்லி அனுப்பினார். ஆனால், சில காரணங்களால் அந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. அதன்பின்னரே மயிலு என்கிற கதையை உருவாக்கி பாரதிராஜா பதினாறு வயதினிலேவாக எடுத்தார்.
 

Leave a Reply