• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கோவை அருகே உள்ள தாராபுரத்தை சொந்த ஊராக கொண்டவர் நாகேஷ்

சினிமா

கோவை அருகே உள்ள தாராபுரத்தை சொந்த ஊராக கொண்டவர் நாகேஷ். 1958ம் வருடம் முதல் 2008 வரை பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். வாலிப வயதில் சென்னை வந்த நாகேஷ் இந்தியன் ரயில்வே துறையில் கிளார்க்காக வேலை பார்த்து வந்தார். நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் வேலை நேரம் போக மற்ற நேரங்களில் நாடகங்களில் நடித்து வந்தார்.

சென்னையில் இவர் தங்கியிருந்த அறையில்தான் நடிகர் ஸ்ரீகாந்த், கவிஞர் வாலி ஆகியோரும் தங்கி சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தனர். ரயில்வே துறை மூலம் நடத்தப்பட்ட ஒரு நாடகத்தில் வயித்து வலியால் அவதிப்படும் நபராக அசத்தலான நடிப்பை கொடுத்தார் நாகேஷ். அந்த நாடகத்திற்கு சிறப்பு விருந்தினரான போன எம்.ஜி.ஆர் நாகேஷின் நடிப்பை பாராட்டி பேசினார்.

மானமுள்ள மறுதாரம் என்கிற படத்தில் நாகேஷ் அறிமுகமானர். அதில் சின்ன வேடம்தான். சினிமாவில் நடிப்பதற்காக தனது வேலையையும் ராஜினாமா செய்தார் நாகேஷ். போராடி, வாய்புகளை பெற்று மெல்ல மெல்ல உயர்ந்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் என பலரின் படங்களிலும் நாகேஷ் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

எதிர் நீச்சல், சர்வர் சுந்தரம் போன்ற சில படங்களில் கதையின் நாயகனாகவும் அசத்தியிருக்கிறார் நாகேஷ். மேலும், 80களுக்கு பின் வில்லன், குணச்சித்திரம் என கலக்கினார். கமலுக்கு மிகவும் பிடித்த நடிகர் இவர். கமலுடன் பல படங்களிலும் நடித்திருக்கிறார். 60களில் தமிழ் சினிமாவின் சில முக்கிய படங்களை இயக்கியவர் ஏ.பி.நாகராஜன்.

தில்லானா மோகானம்பாள் படத்தையும் இயக்கியவர் இவர்தான். இந்த படம் உருவானபோது இப்படத்தில் ஒரு வேடத்தில் நாகேஷை நடிக்க வைப்பது என முடிவெடுத்தார். ஆனால், நாகேஷின் மனைவியின் சகோதரர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட இதில் நாகேஷுக்கு தொடர்பு இருப்பதாக இறந்தவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இதையும் படிங்க: லீவு கொடுக்காத மேனேஜர்!.. நாகேஷ் செய்த அலப்பறை!.. மனுஷன் அப்பவே அப்படித்தான்!..

எனவே, இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. நாகேஷ் சிறைக்கு போகவும் வாய்ப்பிருக்கிறது. அவர் எப்படி இந்த படத்தில் நடிக்கமுடியும் என ஏபி நாகராஜிடம் ஒருவர் கேட்க ‘அந்த வேடத்தை நாகேஷை தவிர வேறு யாரையும் என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. அவரை தவிர வேறு யாராலும் அதை சிறப்பாக செய்யவும் முடியாது. ஒருவேளை அவர் சிறைக்கு போனாலும் விடுதலை ஆனபின் படப்பிடிப்பை நடத்துவேன்’ என சொல்லி இருக்கிறார்.

அந்த வழக்கில் நாகேஷ் நிரபராதி என நிரூபிக்கப்பட்டு விடுதலை ஆனார். தில்லானா மோகானம்பாள் படத்தில் அற்புதமாகவும் நடித்திருப்பார். பின்னாளில் ஏபி நாகராஜன் தன்னை பற்றி பேசியதை கேட்டு நெகிழ்ந்து போனாராம் நாகேஷ். இதே ஏபி நாகராஜன் இயக்கத்தில் உருவான ‘திருவிளையாடல்’ படத்தில் தருமியாக வந்து நாகேஷ் கலக்கி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply