• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கலிபோர்னியாவில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் மர்ம மரணம்

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் சுஜித் ஹென்றி(வயது38). இவரது மனைவி அலைஸ் பிரியங்கா(37). இவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பணிபுரிந்து வந்தனர். சுஜித் ஹென்றி பிரபல நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்திருக்கிறார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அலைஸ் பிரியங்காவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. கணவன்-மனைவி இருவரும் தங்களது மகன்கள் நோவா மற்றும் நாதன் ஆகியோருடன் கலிபோர்னியாவில் சான்மேட்டியோ பகுதியில் வசித்து வந்தார்கள்.

விடுமுறை கிடைக்கும் போது சொந்த ஊருக்கு வந்து சென்றிருக்கின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அலைஸ் பிரியங்காவுக்கு, கேரளாவில் உள்ள அவரது தாய் போனில் அழைத்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் கலிபோர்னியாவில் உள்ள தங்களது உறவினர் ஒருவருக்கு போன் செய்து, அலைஸ் பிரியங்கா வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியிருக்கிறார். அதன்படி அவர்களும், அங்கு சென்றனர். அங்கு வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப் பட்டிருந்தது.

எவ்வளவு அழைத்தும் யாரும் கதவை திறக்க வில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், அது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர்.

அப்போது அங்கு சுஜித் ஹென்றி, அவரது மனைவி அலைஸ் பிரியங்கா மற்றும் அவர்களது 2 மகன்கள் உள்ளிட்ட 4 பேரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். ஏ.சி. அல்லது ஹீட்டரில் இருந்து விஷவாயு கசிந்து 4 பேரும் இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

ஆனால் சுஜித் ஹென்றி, அலைஸ் பிரியங்கா ஆகிய இருவரின் உடலிலும் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் இருந்தன. மேலும் அவர்களது வீட்டில கைத்துப்பாக்கி ஒன்றும் கிடந்துள்ளது. இதனால் சுஜித் ஹென்றி தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்காலம் என்று கருதப்படுகிறது.

ஆனால் குழந்தைகளின் உடலில் துப்பாக்கி குண்டு காயங்கள் எதுவும் இல்லை. ஆகவே அவர்களது மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. கணவன்-மனைவி இருவரின் உடலிலும் துப்பாக்கி குண்டு காயங்கள் இருப்பதால், அவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுத்து கொலை செய்துவிட்டு, அவர்களும் உயிரை மாய்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவில் குழந்தைகள் எப்படி இறந்தன என்பது தெரியவரும். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பூட்டிய வீட்டுக்குள் இறந்துகிடந்த சம்பவம் கலிபோர்னியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Leave a Reply