• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொறுத்தது போதும் பொங்கி எழு.. வெண்கல குரலுக்கு சொந்தக்காரர் நடிகை கண்ணாம்பா!

சினிமா

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் கலைஞர் மு.கருணாநிதி வசனத்தில் உருவான மனோகரா திரைப்படத்தை பற்றி இப்போது பேசினாலும் ‘பொறுத்தது போதும் பொங்கி எழு’ என்ற வசனம்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு அந்த வசனத்தை ஆவேசமாக நடிகை கண்ணாம்பா பேசியிருப்பார். அந்த படம் வெளியானபோது மிகப்பெரிய தாக்கத்தை பார்வையாளர்களுக்கும் உண்டாக்கியது. அத்தகைய வெண்கல குரலுக்கு சொந்தக்காரரான கண்ணம்பா குறித்துதான் தற்போது பார்க்க போகிறோம்.

நடிகை கண்ணாம்பா ஆந்திர மாநிலம், கடப்பா என்ற பகுதியைச் சேர்ந்தவர். பள்ளி படிப்பை படித்து கொண்டிருக்கும்போது அவருக்கு கலை நிகழ்ச்சிகளில் ஆர்வம் ஏற்பட்டதை அடுத்து 16 வயதில் அவர் நாடகங்களில் நடித்தார். நாடக இயக்குனரும் நடிகருமான நாக பூஷன் என்பவரை திருமணம் செய்து கொண்ட கண்ணாம்பா திருமணத்திற்கு பின்னரும் பல நாடகங்களில் நடித்தார்.

இந்த நிலையில் தான் 1935ஆம் ஆண்டு ‘அரிச்சந்திரா’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் 1940ல் ‘கிருஷ்ணன் தூது’ என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘அசோக்குமார்’ என்ற படத்தில் வில்லி கேரக்டரிலும், பி.யு.சின்னப்பா நடித்த கண்ணகி என்ற திரைப்படத்தில் கண்ணகி கேரக்டரிலும் நடித்தார்.

இந்த படங்களின் வெற்றி காரணமாக அவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் அவர் அம்மா கேரக்டரில் நடிக்க தொடங்கினார். அதன் உச்சம் தான் 1954ஆம் ஆண்டு வெளியான ‘மனோகரா’ திரைப்படம். கலைஞர் கருணாநிதி வசனம், சிவாஜிக்கு இணையான நடிப்பு, குறிப்பாக பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்ற வசனம் ஆகியவை கண்ணாம்பாவின் பெயரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியானது. அந்த காலத்திலேயே பான் இந்தியா திரைப்படமாக உருவானது.

அதன் பிறகு சிவாஜி கணேசன் அம்மாவாக வணங்காமுடி, மக்களை பெற்ற மகராசி, காத்தவராயன், படிக்காத மேதை, நிச்சயதாம்பூலம், என் தம்பி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதேபோல் எம்ஜிஆர் அம்மாவாக தாய்க்கு பின் தாரம், தாய் மகளுக்கு கட்டிய தாலி, தாய் சொல்லை தட்டாதே, நீதிக்கு பின் பாசம், போன்ற படங்களில் நடித்தார். அதேபோல் ஜெமினி கணேசன் உட்பட பல பிரபலங்களின் அம்மாவாக நடித்துள்ளார்.

நடிப்பு மட்டுமின்றி அவர் தமிழ், தெலுங்கு என சுமார் 25க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தார். ஆரம்ப காலத்தில் அவர் தயாரித்த படங்கள் பெரிய அளவில் லாபம் கொடுக்கவில்லை என்றாலும் நஷ்டம் இல்லாமல் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் தயாரித்த சில படங்கள் பெரும் நஷ்டத்தை கொடுத்த நிலையில், அந்த நஷ்டத்தை மீட்டெடுக்க எம்ஜிஆர் நடித்த ‘தாலி பாக்கியம்’ என்ற திரைப்படத்தை தயாரித்தார். இதற்கு எம்ஜிஆர் பண உதவி செய்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்பதால் அவர் சென்னையில் ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் எம்ஜிஆர் தான் அந்த வீட்டை காப்பாற்றி கண்ணம்பாவுக்கு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பல வருடங்களாக சினிமாவில் சேர்ந்த சொத்தை ஒரு சில திரைப்படங்கள் தயாரித்து இழந்துவிட்டதை அடுத்து கண்ணம்பா மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் திடீரென அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டதை அடுத்து 1964ஆம் ஆண்டு காலமானார். அவருடைய கடைசி வாழ்க்கை மிகவும் சோகமாக இருந்தாலும் அவருடைய கம்பீரக் குரல் இன்னும் ரசிகர்களின் மனதில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply