• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாட முடியாது என அழுத பி.சுசீலா.. எம்.எஸ்.வி.-யின் நம்பிக்கையால் பாடி தேசிய விருது பெற்ற ஹிட் பாடல் இதான்

சினிமா

கவிஞர்களின் பாடல் வரிகளுக்கும், இசையமைப்பாளர்களின் இசைக்கும் தனது குரலால் பல ஆயிரம் ஹிட் பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் பின்னனிப் பாடகி பி. சுசீலா. எவ்வளவு கஷ்டமான பாடலானாலும் சிங்கிள் டேக்கில் பாடி அசத்தி விடுவது பி.சுசீலாவின் இயல்பு. ஆனால் ஒரு பாடலுக்காக அவர் பலமுறை ரீ டேக் வாங்கி அழுக, சமாதானப்படுத்தி எம்.எஸ்.வி அவரைப் பாட வைத்துள்ளார். குறிப்பிட்ட அந்தப் பாடலும் அவருக்கு அழியாப்புகழைச் சேர்த்து தேசிய விருதினைப் பெற்றுக் கொடுத்தது.

1968-ம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் உயர்ந்த மனிதன். சிவாஜி கணேசன், சவுக்கார் ஜானகி இணைந்து நடித்த இந்த படத்தில், மேஜர் சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். எம்.எஸ்.வி யின் இசையில் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொண்டு இப்படம் வெற்றி பெற்றது. குறிப்பாக அந்தநாள் ஞாபகம்.. போன்ற பாடல்கள் இன்றும் நட்பின் அடையாளமாகத்  திகழும் பாடல்களில் ஒன்று.

இந்த படத்தில் வரும் ‘’நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஒரு பாடலாக உள்ளது. வாலி எழுதிய இந்த பாடலுக்கு தனது குரலின் மூலம் உயிர் கொடுத்தவர் தான் பி.சுசிலா. இந்த பாடல் பதிவின் போது, என்னால் இந்த பாடலை பாட முடியாது என்று சுசிலா அழுதுகொண்டே கூறியுள்ளார். ஆனால் அவரை விடாத எம்.எஸ்.வி, ஒருவழியாக சம்மதிக்க வைத்துப் பாட வைத்துள்ளார்.

அதன்பிறகு பாட தொடங்கிய பி.சுசீலா பலமுறை ரீ-டேக் வாங்கியுள்ளார். ஆனாலும், எம்.எஸ்.வி விடாமல் மீண்டும் மீண்டும் பாட சொல்ல, ஒரு கட்டத்தில் சோர்ந்து போன பி.சுசீலா, என்னால் இந்த பாடலை பாட முடியாது. நீங்கள் வேறு யாரையாவது வைத்து பாடலை பதிவு செய்துகொள்ளுங்கள் என்று அழுதுகொண்டே அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு இருக்கிறார். இருந்தபோதிலும் ஆனால் எம்.எஸ்.வி விடவில்லை.

மீண்டும் மீண்டும் அவரை ரீ-டேக் எடுத்து பாட வைத்த எம்.எஸ்.வி பாடல் பதிவு முடித்தவுடன், இன்று நீங்கள் பாடிய இந்த பாடல் உங்களுக்கு பெரிய பெயரை பெற்று தரும். அந்த அளவிற்கு நீங்கள் உழைப்பை கொடுத்திருக்கிறீர்கள் என்று பாராட்டியுள்ளார். இந்த பாடலுக்கு தான் பி.சுசீலாவுக்கு சிறந்த பின்னனிப் பாடகிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply