• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஷியா- உக்ரைன் இடையே போர்க்கைதிகள் பரிமாற்றம்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைய இருக்கிறது. இரு நாடுகளும் மிகப்பெரிய அளவில் சேதங்களை எதிர்கொண்டுள்ளன. என்றபோதிலும் போர் நிறுத்தத்திற்கான வாய்ப்பு இன்னும் ஏற்படவில்லை.

போர் நிறுத்தம் என்பது ரஷியாவுக்கு சாதகமானது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து வருகிறார். உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் வழங்கி வருகின்றன.

ரஷியாவுக்கு சீனா மற்றும் வடகொரியா ஆகியவை மறைமுகமாக ஆயுதங்கள் கொடுத்து வருகின்றன. இதனால் தற்போதுகூட மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் ரஷியாவின் போர் விமானம் போர்க்கைதிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்போது சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரைன்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா குற்றம்சாட்டியது. விமானத்தில் 77 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

அதில் ஆறு விமான ஊழியர்கள் மற்றும் மூன்று ரஷிய வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சை பெரிதாக வெடித்த நிலையில் போர்க்கைதிகளை மாற்றிக்கொள்ள இருதரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில் 195 போர்க்கைதிகள் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் கைதிகள் பரிமாற்றம் நடைபெற இருந்தது. ஆனால், அது நிறுத்தப்பட்டது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

Leave a Reply