• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மொட்டைத்தலை, தாடி, கையில் காப்பு... ஸ்டைல் காட்டிய கமல்!

சினிமா

36ம் ஆண்டில் ‘சத்யா ஜனவரி 29 , 1988
மொட்டைத்தலை, தாடி, கையில் காப்பு... ஸ்டைல் காட்டிய கமல்!
படித்துவிட்டு வேலை தேடி அலையும் இளைஞர்களின் அவமானங்களையும் வேதனைகளையும் மூலதனமாக வைத்துக் கொண்டு, அவர்களை ’யூஸ் அண்ட் த்ரோ’க்களாக உபயோகித்து தூக்கியெறிகிற அரசியல் அவலத்தை ஆக்ரோஷத்துடன் சொன்ன படம் தான் ‘சத்யா’.
‘சத்யா’ , தமிழ் சினிமாவின் ஆகப்பெரிய முத்திரை பதித்த படம்! 
1985-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘அர்ஜூன்’ என்கிற படத்தின் உரிமையை வாங்கி, அதை தமிழுக்கும் தனக்கும் தகுந்தவாறு முழுவதுமாக மாற்றியமைத்து ‘சத்யா’வை உருவாக்கினார் கமல்ஹாசன்.
‘ஏக் துஜே கேலியே’ படத்தின் மூலம் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த சுரேஷ் கிருஷ்ணா, பின்னாளில், ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ வெல்லாம் எடுத்தார். ஆனால், அவரின் முதல் இயக்கம் கமலின் ‘சத்யா’தான்!
கமல்ஹாசன் சத்யா படத்தில்...
மொட்டைத்தலையில் லேசாக வளர்ந்த முடி, கன்னத்தின் தாடி, கழுத்தில் கயிறு, அரைக்கைச் சட்டையை இன்னும் மடித்துவிட்டு ‘புஷ்டி’ காட்டும்படியான உடல்வாகு, வெளுத்துப்போன ஜீன்ஸ் பேன்ட், சாதாரண செருப்பு, கையில் காப்பு என எண்பதுகளின் இறுதியில் இளைஞர்களுக்கு ஒரு புது அடையாளமாக ‘சத்யா’ கமல் திகழ்ந்தார். இந்தப் படம் வந்த பிறகு, காப்பு போட்டுக்கொண்ட இளைஞர்களும் தாடி வைத்துக் கொண்ட இளைஞர்களும் அதிகமானார்கள்.
நாசர், ராஜேஷ், கிட்டி, ஜனகராஜ், கவியூர் பொன்னம்மா, வடிவுக்கரசி, டிகேஎஸ்.நடராஜன், ஆர்.எஸ்.சிவாஜி, ஆனந்த், சுந்தர் எனப் பலரும் நடித்தார்கள். கமலுக்கு ஜோடியாக அமலா. இருவருக்கும் அப்படியொரு பாந்தம் அழகிலும் நடிப்பிலுமாக ஜொலித்தது.
கமலின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம் தர்மாதான் இந்தப் படத்துக்கு மாஸ்டர். ‘விக்ரம்’ படத்தில் தனித்து அடையாளம் காணப்பட்டதால் விக்ரம் தர்மா என்றானார். ஆனால், ‘சத்யா’ படம்தான், அவர் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமான முதல் படம். படத்தின் கதை வலுவானது என்றால், ஒவ்வொரு சண்டைக் காட்சியும் அப்படியே யதார்த்த ரகம்.
கொட்டும் மழை. தியேட்டரில் இருந்து பஜார் வீதிக்குள் குடையுடன் வருகிற கூட்டம். அந்தக் கூட்டத்துக்கு நடுவே நடக்கிற கொலை, நமக்குள் பகீர் கிளப்பும். போலீஸ் ஸ்டேஷன் வாசலில், அந்த ரவுடிக் கூட்டத்தைப் பார்த்துவிட்டு அடிப்பதற்கு செங்கல் எடுப்பார் கமல். அப்போது சைக்கிள் கேரியரில் உருட்டுக்கட்டைகளுடன் செல்வார் யாரோ ஒருவர்.
அதிலிருந்து இரண்டு கட்டைகளை உருவி, ரவுடிகளைப் பந்தாடும் காட்சி, அந்தப் பகுதி மக்களுக்கு ஷூட்டிங் என்பது தெரியாமலேயே எடுக்கப்பட்டது. மாடியில் இருந்தும், காருக்குள்ளிருந்தும், லாரிக்குள்ளிருந்துமாக கேமராவை வைத்துக்கொண்டு எடுத்த காட்சிகளை இப்போது பார்த்தாலும், ஒரு தெருச்சண்டை எஃபெக்ட்டுடன் இருக்கும். சண்டைக்காட்சிகளில் அடி வாங்குகிற சத்தம், தமிழ் சினிமாவில் அதுவரை வந்திடாத, ஒலிச்சேர்ப்பு மாயங்கள் செய்த, யதார்த்த சத்தம்!
கவிஞர் வாலி, டெல்லி கணேஷ் முதலானோரும் நடித்தார்கள். இந்தியில் மிகப்பெரிய ஒளிப்பதிவாளர் எனப் பேரெடுத்த எஸ்.எம்.அன்வர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். ‘பாட்ஷா’ படத்தில் தெருவில் ரஜினி எல்லோரையும் அடித்துக் கொண்டே ‘உள்ளே போ’ என்று தங்கையைச் சொல்வார். அது இந்தப் படத்திலேயே வைக்கப்பட்டிருந்தது. அதேபோல், ‘சத்யா’ படத்தின் வீடு, மாடி, தெரு முதலான செட்டுகளும் ‘பாட்ஷா’ படத்தின் செட்டுகளும் ஓரளவுக்கு ஒரே சாயலில் பண்ணியிருந்தார் சுரேஷ் கிருஷ்ணா.
கமல்ஹாசன் தன்னுடைய குருவாகவே பாவிக்கும் அனந்து இந்தப் படத்துக்கான திரைக்கதைப் பங்களிப்பை கமலுடன் இணைந்து செய்திருந்தார்.

1987-ம் ஆண்டு மணி ரத்னத்துடன் இணைந்து ‘நாயகன்’ தீபாவளித் திருநாளில் உருவானது. அதன் பின்னர், மெளன மொழிப் படமாக சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில், அமலாவுடன் நடித்த ‘பேசும்படம்’ வெளியானது. இதையடுத்து 1988ம் ஆண்டு, ஜனவரி 29-ல், ’சத்யா’ வெளியானது. 1987 டிசம்பர் 24-ம் தேதிதான் எம்ஜிஆரின் மரணம் நிகழ்ந்தது. அதையடுத்து வெளியான கமலின் இந்தப் படத்தை, ‘எம்ஜிஆருக்கு சமர்ப்பணம்’ என்றே டைட்டிலில் எம்ஜிஆர் புகைப்படத்தைக் காட்டி பதிவிட்டார் கமல்.
ஆம்புலன்ஸில் எரிகிற லைட், ஆம்புலன்ஸ் சத்தத்தில் தொடங்கி, ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று, கமலின் முகத்தையும் காயங்களையும் காட்டி முடிக்க, அங்கிருந்து ஃப்ளாஷ்பேக் தொடங்கும். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிஜிஎம்மின் ராஜா என்பதை இசைஞானி இளையராஜா நிரூபித்திருப்பார். பாடல்களும் அப்படித்தான்!
இந்தப் படத்துக்காக லதா மங்கேஷ்கரும் எஸ்பி.பி-யும் பாடிய ‘வளையோசை கலகலகலவென’ பாடல் இன்றைக்கு எங்கே கேட்டாலும் அந்த நான்கு நிமிடத்துக்கு நின்று கேட்டுவிட்டுத்தான் நகருவோம். அதிலும் அந்த ஆரம்பப் புல்லாங்குழலின் ஜாலத்தை இளையராஜா விவரிக்க, புல்லாங்குழல் கலைஞரான நெப்போலியன் என்ற அருண்மொழி அதை வாசித்துக் காட்ட, அந்த வீடியோவை ஷேர் பண்ணி, லைக் பண்ணியவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.
வில்லன் கிட்டியின் நடிப்பு பிரமாதம். பசுத்தோல் போர்த்திய புலி என்பது போல் அவரின் செயல்களுக்கு அவ்வளவு கனிவும் கருணையுமாக எஸ்பி.பி-யின் குரல் அட்டகாசமாகப் பொருந்தியிருக்கும். ’வளையோசை’ பாடலும் பாடல் படமாக்கப்பட்ட விதமும் பிரமிப்பாகவும் கவிதையாகவும் இருந்தது.
அதேபோல், சண்டை போட்டுவிட்டு, அங்கே போய்க்கொண்டிருக்கும் பேருந்தில் கமலும் நண்பர்களும் தொற்றிக்கொள்ளும் காட்சியும் வியக்கவைத்தது. மலையாள நடிகர் பகதூர், கமலின் அப்பா கேரக்டருக்கு, முகம், கண்கள், உயரம் என அப்படிப் பொருந்தினார். வடிவுக்கரசியின் கோபமான அலட்சியமான நடிப்பு ரசிக்கவைத்தது. இந்துவும் ராசியும் சகோதரிகளாகவே நடித்தார்கள். சண்டைக்காட்சிகளில் வந்து தலைகாட்டிவிட்டு, அடிவாங்கிச் செல்லும் அழகு எனும் கலைஞருக்கு இந்தப் படம் வாழ்நாள் பெருமைக்கான படம்.
கமலின் ‘சத்யா’ ஏற்படுத்திய தாக்கம் தமிழக ரசிகர்களிடம் மிக மிக அதிகம். அதுமட்டுமா? திரையுலகில் உள்ள இன்றைக்கு இருக்கிற பல பிரமுகர்களையும் அன்றைக்கும் அசைத்துப் பார்த்தது ‘சத்யா’. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், கையில் இப்போதும் காப்பு அணிந்திருக்கிறார். தவிர, அவரின் படங்களில் வருகிற நாயகர்களுக்கும் காப்பு அணிவித்துவிடுவார்.
‘’இதற்கெல்லாம் காரணம் ‘சத்யா’வும் கமல்  ஏற்படுத்திய தாக்கம்தான். நான் கமல் சாரின் தீவிர ரசிகன்’’ என்று அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். சமீபத்தில் கமலின் தயாரிப்பில் கமலை வைத்து ’விக்ரம்’ எடுத்த லோகேஷ் கனகராஜும் ‘சத்யா’ படத்தையும் அந்தப் படத்தில் உள்ள காட்சிகளையும் சிலாகித்து பிரமிப்புடன் சொல்லியிருக்கிறார். இப்படி, திரையுலகில் இருப்பவர்களையே அசைத்து, ஈர்த்து, பாதிப்பை ஏற்படுத்தினான் ‘சத்யா’.
படம் வெளியாகி, 36 ஆண்டுகளானாலும், மொட்டைத்தலையும் தாடியும் கையில் காப்புமாக வந்து, அமலாவுடன் பஸ் படிக்கட்டில் ‘வளையோசை கலகலகலவென...’ என்று பாடியும் அரசியலைச் சாடியுமாக எடுத்த ‘சத்யா’வை இன்னும் மறக்கவில்லை ரசிகர்கள்!
நன்றி ...
காமதேனு,
தமிழ் ஹிந்து.

 

Leave a Reply