• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கதாபாத்திரங்களே ஏங்கும் கலைஞர் மேஜர் சுந்தரராஜன்!

சினிமா

தமிழ் சினிமா ஆகச் சிறந்த பல கலைஞர்களை உருவாக்கியுள்ளது. அதேபோல் அந்த ஆகச் சிறந்த கலைஞர்களால் தமிழ் சினிமா வளர்ச்சியையும் பெற்றுள்ளது. இதில் பல கலைஞர்கள் தங்களது திறமையின் மூலம் பங்களிப்பை கொடுத்துள்ளனர். அதில் தமிழ் சினிமா தவிர்க்க முடியாத ஆகச்சிறந்த நடிகர்களின் ஒருவர் மேஜர் சுந்தரராஜன்.

அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் அம்சமாக அமர்ந்து விடும் நடிகர் மேஜர் சுந்தரராஜன் என்று கூறினால் அது மிகையாகாது. தொலைபேசி துறையில் பணிபுரிந்து கொண்டு ஓய்வு நேரங்களில் மேடை நாடகங்களில் நடித்தவர் இவர்.

நாடகத் துறையில் இருந்து 1962 ஆம் ஆண்டு பட்டினத்தார் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இயக்குனர் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த மேஜர் சந்திரகாந்தி என்ற திரைப்படத்தில் பார்வையற்ற மேஜர் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரத்தின் பெயர் மேஜர். அதிலிருந்து இவரது பெயரின் அடைமொழியாக மேஜர் சுந்தரராஜன் அனைவராலும் அழைக்கப்பட்டார்.

அனைத்து கதாபாத்திரங்களிலும் தன்னை அர்ப்பணிக்கும் மேஜர் சுந்தரராஜன் 900க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இருக்கும் மிமிக்ரி கலைஞர்களின் லிஸ்டில் இவரது குரலும் கட்டாயம் இருக்கும்.

அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஆழமான இடத்தை பிடித்தவர் இவர். ஒரு வசனத்தை ஆங்கிலத்திலும், தமிழிலும் இரண்டு முறை உச்சரிப்பார். அதுதான் இவரது ஸ்பெஷல். தமிழ் சினிமாவை ஆண்ட எம்ஜிஆர் மற்றும் சிவாஜிக்கு தந்தையாக அப்பொழுது நடித்துள்ளார்.

குரலில் ஒரு கம்பீரம், உடலில் ஒரு வீரம், மொழியை கையாளும் விதம், அதனை உச்சரிக்கும் பாங்கு அனைத்திலும் ஆகச் சிறந்த கலைஞராக திகழ்ந்தவர் மேஜர் சுந்தரராஜன். இவர் ஒரு சில மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சிம்மக் குரல் அழகனாக திகழ்ந்த மேஜர் சுந்தரராஜன் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் பற்றாளரான இவர் நடிகர் சிவாஜி கணேசன் தொடங்கிய தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் சிவாஜி கணேசன் ஜனதா தளம் கட்சியில் இணைந்த போது இவரும் தன்னை அந்த கட்சியில் இணைத்து கொண்டார்.

தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த கலைஞரான மேஜர் சுந்தரராஜன் பிறந்து இன்றுடன் 88 ஆண்டுகள் ஆகும். ஆனால் ஒரு கலைஞரின் வாழ்வில் நாம் அவரைப் பற்றி நினைவு கூறுவதே அவர்கள் திறமையின் வெற்றியாகும்.
 

Leave a Reply