அழுதுகொண்டே பாடிய டி.எம்.எஸ்... பஞ்சாபி நடனத்தில் அசத்திய எம்.ஜி.ஆர் - குடியிருந்த கோயில் ப்ளாஷ்பேக்
சினிமா
எம்.ஜி.ஆர் நடிப்பில் பல படங்களை இயக்கிய இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் கடந்த 1968-ம் ஆண்டு வெளியான படம் குடியிருந்த கோயில். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
தமிழ் சினிமா பாடல்களில் இலக்கிய நடை கொண்டுவந்த கவிஞர்களில் முக்கியமானவர் புலமை பித்தன். எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1968-ம் ஆண்டு வெளியாக குடியிருந்த கோயில் படம் தான் இவர் அறிமுகமான முதல் படம். இந்த படத்தில் அவர் எழுதிய ஒரு பாடலை, பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் அழுதுகொண்டே பாட, அங்கு பாடல் பதிவில் இருந்த ஒரு இசை கலைஞர் இனி வரும் கவிஞர்கள் அனைவரும் திண்டாடா வேண்டியதுதான் என்று கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் நடிப்பில் பல படங்களை இயக்கிய இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் கடந்த 1968-ம் ஆண்டு வெளியான படம் குடியிருந்த கோயில். எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில், ஜெயலலிதா, ராஜஸ்ரீ, நம்பியார், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதிலும் குறிப்பாக நான் யார்? நான் யார்? என்று கவிஞர் புலமை பித்தன் எழுதிய இந்த பாடல் இன்றைய ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கும் எம்.ஜி.ஆர். பாடுவது போன்ற ஒரு பாடலை எழுத பல கவிஞர்களை வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எழுதிய பாடலில் திருப்தி இல்லாத இயக்குனர் கே.சங்கர், கவிஞர் புலமை பித்தனை அறிமுகம் செய்கிறார்.
படத்தின் கதையை விளக்கி, பாடல் எங்கு வர வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து, புலமை பித்தன் அந்த பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலை பாட வந்த டி.எம்.சௌந்திரராஜன், பாட தொடங்கியதுமே அழுதுகொண்டே பாடியுள்ளார் அந்த நேரத்தில் அவரது மகன் இறந்திருந்ததால், அவர் இந்த பாடலில் தனது நிலையையும் பொருத்திக்கொண்டு கண்ணீருடன் பாடி முடித்துள்ளார். இந்த பாடல் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதே போல் ஆலங்குடி சோமு எழுதிய ‘’ஆடலுடன் பாடலை கேட்டு’’ என்ற பாடல் இன்றும் பல பாட்டுக்கச்சேரி நிகழ்ச்சிகளில், முக்கிய பாடலாக ஒலித்து வருகிறது. இந்த பாடலுக்கு பஞ்சாபி நடனம் ஆடினால் நன்றாக இருக்கும் என்று யோசித்த இயக்குனர் சங்கர், அதை எம்.ஜி.ஆரிடம் சொல்ல, அவர் முடியவே முடியாது என்று கூறியுள்ளார். அதன்பிறகு பல முயற்சிகளுக்கு பிறகு ஒரு வழியாக எம்.ஜி.ஆர் ஆடியுள்ளார்.
இந்த பாடலை போலவே இந்த பாடலில் எம்.ஜி.ஆர் ஆடும் அந்த பஞ்சாபி நடனமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடியிருந்த கோயில் படமும் எம்.ஜி.ஆர் திரை வாழ்க்கையில் முக்கிய வெற்றிப்படமாக மாறிய நிலையில், சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதையும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.