• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை வானொலியில் ஒரு வருடத்திற்கு மேல் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்த பாடல்

சினிமா

இலங்கை வானொலியில் ஒரு வருடத்திற்கு மேல் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்த பாடல்.. நால்வர் கூட்டணியால் நிகழ்ந்த அற்புதம்!

Spotify செயலியில் பாடல்களைக் கேட்கும் 2K கிட்ஸ்களுக்கு வானொலிகளின் அருமைகள் தெரிந்திருக்காது என்றே சொல்லலாம். இணையம், தொலைக்காட்சி, பண்பலை போன்றவை வருவதற்கு முன் மிகச் சிறந்த தொலைத் தொடர்புச் சாதனமாக இருந்தது வானொலி. வானொலி கேட்கும் நேரம் நம் வாழ்வின் உன்னத நேரம் என்று வைரமுத்து கூறியிருப்பார்.

அந்த அளவிற்கு வானொலி 60, 70, 80, 90 வரையிலும் ஆட்சி செய்தது. அதிலும் குறிப்பாக ஆசியாவின் முதல் வானொலி நிலையமாக அமைந்த இலங்கை வானொலி நிலையத்திற்கு அடிமையாகாதவர்களே இல்லையென்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருந்தது.

முதல் உலகப் போரில் கைப்பற்றப்பட்ட ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பலிருந்து பெறப்பட்ட வானொலிக் கருவியைக் கொண்டு,1922 ஆம் ஆண்டு, நிறுவப் பட்டது. டென்சிங், ஹிலாரி இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த போது அங்கிருந்து அவர்களால் கேட்க முடிந்த ஒரே வானொலி சேவை இலங்கை வானொலி சேவை தான். அவ்வளவு தூரம் அவர்களின் தொழில் நுட்பம் தரமானதாக இருந்தது. அவர்களிடம் இல்லாத தமிழ் இசைதத்தட்டுகளே இல்லை என்று சொல்லுமளவிற்கு அவர்களின் தொகுப்பு இருந்தது.

ஆசிய சேவை, தமிழ்சேவை ஒன்று, தமிழ்சேவை இரண்டு என்று பல விதமான ஒலிபரப்புகள் இலங்கையில் இருந்து ஒலிபரப்பப் பட்டன. இவற்றுள் ஆசிய சேவை மிகப் பழையது. இதில் தினமும் ஒலிபரப்பப் படுகிற பாடல்களைக் கேட்பதற்காகவே கோடிக்கணக்கில் ரசிகர்கள் காத்துக் கிடப்பர்.

அவ்வாறு கோடிக்கணக்கான மக்களால் கேட்கப்பட்டு இன்றும் இந்தப் பாடலைக் கேட்டால் பழைய நினைவுகளைத் தூண்டிவிடும் முத்தான பாடல் தான் நிழல் படத்தில் இடம்பெற்ற இது பொன்மாலைப் பொழுது என்ற பாடல். 1980-ல் பாரதிராஜா இயக்கத்தில், நிழல்கள் ரவி, ராஜ சேகர், சந்திர சேகர், ரோஹினி ஆகியோர் நடித்த இப்படம் பாடல்களுக்காகவே வெற்றி பெற்றது.

கவிஞர் வைரமுத்துவுக்கு முதல் படமாக அமைந்த நிழல்கள் படத்தில் இடம்பெற்ற பொன்மாலைப் பொழுது என்ற பாடல் அப்போது பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக இருந்தது. காரணம் இலங்கை வானொலி. இந்தப் பாட்டு கேட்பதற்காகவே தினமும் ரேடியோமுன் அமர்ந்து தவம் கிடந்த ரசிகர் பட்டளாம் ஏராளம். எஸ்.பி.பி. குரலில், வைரமுத்து வரிகளில் அமைந்த இப்பாடலுக்கு இளையராஜா மாலை நேரத்து மயக்கமாய் இசையமைத்திருப்பார்.

இப்பாடல் இலங்கை வானொலியில் நீங்கள் கேட்டவையில் தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக ஒலிபரப்பப்பட்டு சாதனை புரிந்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. மேலும் இந்த இலங்கை வானொலியால் மட்டுமே 80 களின் பாடல்கள் மக்களை எளிதில் சென்றடைந்தன என்றால் அது மிகையாகாது.
 

Leave a Reply