• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இயக்குனர் ஸ்ரீதரை மீட்டு எடுத்த எம்.ஜி.ஆர் - உரிமைக் குரல்  லாபத்தில் உயிர் பெற்ற சிவாஜி படம்

சினிமா

சிவாஜி கணேசன் நடித்த படத்தை தயாரித்து இயக்கி இயக்குனர் ஸ்ரீதரின் பொருளாதார சிக்கலை எம்.ஜி.ஆர்: 'உரிமைக் குரல்' படம் பெற்ற லாபத்தில் மீண்டும் உயிர் பெற்றது.

இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான திரைப்படம் ‘வைர நெஞ்சம்’. இதில் சிவாஜி கணேசன், பத்மப்ரியா, முத்துராமன், பாலாஜி, சி.ஐ.டி சகுந்தலா உள்ளிட்ட பலரது நடித்தனர். இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.

இப்படம் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. இந்தியில் படம் சீக்கிரமே முடிவடைந்து வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

தமிழில் ‘வைர நெஞ்சம்’ படத்தை முடிக்க முடியாத அளவுக்கு ஸ்ரீதருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஸ்ரீதரின் இக்கட்டான நிலையை அறிந்த எம்.ஜி.ஆர், அவரை அழைத்து 'உங்களுக்கு நான் ஒரு படம் பண்ணி தருகிறேன்' என்று தேடி வந்து உதவி செய்தார். அப்படி உருவான படம்தான் ‘உரிமைக்குரல்’.

இரண்டு அன்பான அண்ணன் தம்பிகள் எஸ்.வி.சகஸ்ரநாமம், எம்.ஜி.ஆர் இருவரும் பாசத்துடன் இருப்பவர்கள். அந்த ஊரைச் சேர்ந்த லதா, எம்ஜிஆரை காதலிப்பார். இப்படி கதை சென்று கொண்டிருக்கும் நிலையில் அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து அந்த ஊர் பண்ணையார் நம்பியாரிடம் கடன் வாங்குவார்கள்.

நம்பியார், லதாவை திருமணம் செய்ய முயற்சி செய்யும்போது எம்.ஜி.ஆர் லதாவை அழைத்துச் சென்று ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொள்வார். அதனால் ஆத்திரம் அடைந்த நம்பியார் வாங்கிய கடனை உடனே கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் வீட்டை ஏலத்திற்கு கொண்டு வருவேன் என மிரட்டுவார். அதன் பிறகு எங்கெங்கோ பணத்தை புரட்டி எம்.ஜி.ஆர் தனது வீட்டை மீட்பார்.

அந்த நேரத்தில் திடீரென பண்ணையார் நம்பியார், லதாவை கடத்திக்கொண்டு செல்ல, அவரை எம்.ஜி.ஆர் விரட்டிச் சென்று லதாவை மீட்டு தனது வீட்டையும் மீட்டு தனது அன்பான குடும்பத்துடன் இணைந்து வாழ்வார் என்பது தான் படத்தின் கதை.

இப்படம் 1974ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, படத்தின் பாடல்கள் இன்றும் அனைவர் மனதிலும் நிற்கும். ‘கல்யாண வளையோசை’, ‘நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு’, ‘விழியே கதை எழுது’ போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவையாக உள்ளன.

‘உரிமைக்குரல்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தில் கிடைத்த லாபத்தை வைத்துதான் ‘வைர நெஞ்சம்’ படத்தை ஸ்ரீதர் முடித்தார். ஆனாலும், படம் இந்தியில் வெளியாகி தோல்வி அடைந்தது போலவே தமிழிலும் தோல்வி அடைந்தது.
 

Leave a Reply