• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கார் பயணத்தில் உருவான கதை... கண்ணதாசன் எழுதிய திருமண பாடல் - அவர் மகள் திருமணத்தில் நடந்த நிகழ்வு

சினிமா

டி.எம்.சௌந்திரராஜன் பாடிய இந்த பாடலின் இடையில் முத்துராமன் கே.ஆர்.விஜயா திருமணத்தின் பத்திரிக்கை வாசிப்பது போல் வரும் வசனங்கள் மிகவும் பிரபலமானவை.

இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில், சிவாஜி முத்துராமன் இணைந்து நடித்த ஒரு படத்தில் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் ஒரு திருமணத்தில் நெகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தியது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

1967-ம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான படம் நெஞ்சிருக்கும் வரை. சிவாஜி, முத்துராமன், கே.ஆர்.விஜயா, இணைந்து நடித்த இந்த படத்திற்கு, சித்ராலயா கோபு வசனம் எழுதியிருந்தார். புதுமுகங்களை வைத்து படம் இயக்கிய ஸ்ரீதருக்கு அடுத்து மீண்டும் சிவாஜி நடிக்கும் படத்தை இயக்க வேண்டும் என்ற வாய்ப்பு வருகிறது. ஸ்ரீதரின் அனைத்து படங்களிலும் பணியாற்றிய சித்ராலயா கோபு, அப்போது பிஸியாக இருந்துள்ளார்.

சிவாஜி படம் தொடர்பாக ஸ்ரீதர், சித்ராலயா கோபுவை சந்தித்தபோது, அவர் தான் இப்போது பெங்களூர் செல்வதாக கூறிய நிலையில், காரில் பெங்களூர் போவோம். 6 மணி நேரம் ஆகும் அதற்குள் கதையை முடிவு செய்துவிடலாம் என்று ஸ்ரீதர் சொல்ல, இருவரும் பெங்களூருக்கு காரில் புறப்பட்டுள்ளனர். அப்போது இந்த கார் பயணத்திலேயே, கதையை முடிவு செய்து, அதற்கான நடிகர் நடிகைகளையும் தேர்வு செய்துள்ளனர்.

அதன்படி, சிவாஜி, முத்துராமன் மற்றும் அவரது நண்பர் மூவரும், படித்து முடித்துவிட்டு வேலை தேடி அலையும் நண்பர்கள் கே.ஆர். விஜயாவின் வீட்டில் தங்கியுள்ளனர். இதில் சிவாஜி கே.ஆர். விஜயாவை ஒரு தலையாக காதலிக்க, அவரோ முத்துராமனை காதலிக்கிறார். இதை தெரிந்த சிவாஜி அவர்களை சேர்த்து வைக்க நினைக்கும்போது, முத்துராமன் வேலை கிடைத்து வேறு இடத்திற்கு சென்றுவிடுகிறார். அதே நேரத்தில் கே.ஆர். விஜயாவின் தந்தையும் இறந்து விடுகிறார்.

அவர் மரண படுக்கையில் இருக்கும்போது, இவளை உன் தங்கையாக ஏற்றுக்கொண்டு, அவளுக்கு ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொடு என்று சிவாஜியிடம் கூறி விடுவார். காதலியை தங்கையாக ஏற்றுக்கொண்ட சிவாஜி முத்துராமனுக்கு கே.ஆர். விஜயாவை திருமணம் செய்து வைப்பார். அந்த சமயத்தில் வரும் பாடல் தான் ‘’பூ முடிப்பாமல் இந்த பூங்குழலி’’ என்ற பாடல். கண்ணதாசன் எழுதிய இந்த பாடல் இன்றும் திருமண வீடுகளில் ஒலித்து வருகிறது.

டி.எம்.சௌந்திரராஜன் பாடிய இந்த பாடலின் இடையில் முத்துராமன் கே.ஆர்.விஜயா திருமணத்தின் பத்திரிக்கை வாசிப்பது போல் வரும் வசனங்கள் மிகவும் பிரபலமானவை. கண்ணதாசன் எழுதிய இந்த பாடல் அவரது வாழ்க்கையிலேயே பெரிய அதிசயத்தை ஏற்படுத்தியது தான் சிறப்பு. ஒருகட்டத்தில் கண்ணதாசனின் மகள் திருமணம் உடனடியாக நிச்சயமாகிறது. அப்போது கையில் பணம் இல்லாததால் எப்படி திருமணத்தை நடத்த போகிறோம் என்று யோசித்துள்ளார்.

அந்த சமயத்தில் இவர் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து கண்ணதாசனுக்கு உதவிகள் குவிகிறது. இதனால் ஆச்சரியத்தில் இருந்தவர் தனது மகள் திருமணத்தை சிறப்பாக நடத்துகிறார். அப்போது திருமணம் முடிந்து மகள் மருமகன், கண்ணதாசன் காலில் விழும்போது கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த டி.எம்.எஸ். சரியான நேரத்தில் ‘’பூ முடிப்பால் இந்த பூங்குழலி’’ என்ற பாடலை பாடியுள்ளார். கண்ணதாசன் எழுதிய திருமண பாடல் அவரது வாழ்க்கையிலே நடந்துள்ளது.
 

Leave a Reply