எம்.ஜி.ஆரின் தீராத நடிப்பு ஆசை... தடை போட்ட பிரபலம் - இறுதியில் பரபரப்பான தமிழகம்
சினிமா
சினிமாவில் இருந்துகொண்டே அரசியல் களத்திலும் தனது பார்வையை திருப்பிய எம்.ஜி.ஆர், தனது திரைப்படத்தில் வரும் கருத்துக்கள் மூலம் மக்கள் மனதில் அதிகரித்தது. நீங்காத ஒரு இடத்தை பிடித்திருந்தார்.
எம்.ஜி.ஆர் சினிமா, அரசியல் என இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணம் செய்திருந்தாலும் முதல்வர் ஆன பின் அவர் சினிமாவில் நடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவர் முதல்வர் பதவியில் இருந்துகொண்டே நடிப்பது என்று முடிவு எடுத்தபோது, அவருக்கு அப்போதைய பிரதமர் தடை விதித்துள்ளார்.
நாடக நடிகராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். சிறுவயதில் நாடகங்களில் நடித்து அதன்பிறகு 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், 10 வருட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு பல வெற்றிப்படங்களை கொடுத்து, முன்னணி நடிகராக உயர்ந்த எம்.ஜி.ஆர், தான் நடிக்கும் படங்களில் அனைத்து முடிவுகளையும் தானே எடுக்கும் நிலையில் இருந்தார்.
சினிமாவில் இருந்துகொண்டே அரசியல் களத்திலும் தனது பார்வையை திருப்பிய எம்.ஜி.ஆர், தனது திரைப்படத்தில் வரும் கருத்துக்கள் மூலம் மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்ததால், அரசியலிலும் அவருக்கான செல்வாக்கு அதிகரித்தது. இதன் காரணமாக திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர், உடனடியாக அதிமுக கட்சியை தொடங்கி முதல்வர் பதவியில் அமர்ந்தார். அவர் உயிருடன் இருக்கும்வரை தமிழகத்தில் வேறு கட்சி ஆட்சிக்கு வரவில்லை.
அரசியலில் முதல்வர் அரியணையில் ஏறிய எம்.ஜி.ஆருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை தீர்ந்தபாடில்லை. அப்படி ஒருநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சார்பில் சினிமா எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிக்கை வெளியானது. இந்த பத்திரிக்கையின் வெளியீட்டு விழாவில், எம்.ஜி.ஆர், இயக்குனர் முக்தா சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய முக்தா சீனிவாசன், சினிமாவில் பல கருத்துக்களை நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் முதல்வர் ஆகிட்டீங்க, இனிமேல் அப்படி யார் சொல்வார் என கேட்டுள்ளார். இதன்பிறகு விழாவின் இறுதியில் பேசிய எம்.ஜி.ஆர், இனி தொடர்ந்து பாதி நாள் ஆட்சியிலும், பாதி நாள், சினிமாவிலும் இருப்பேன் என்று கூறியுள்ளார். இந்த செய்தி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் எம்.ஜி.ஆர் பேசிய இந்த கருத்து, அப்போது பிரதமராக இருந்த மொராஜிதேசய்க்கு தெரிய வந்த நிலையில், இரவு 11 மணிக்கு எம்.ஜி.ஆரை தொலைபேசியில் அழைத்த அவர், முதல்வராக இருந்துகொண்டு நீங்கள் நடிக்க கூடாது. அப்படி நடிக்க வேண்டும் என்றால் முதல்வராக வேறு ஒருவரை நியமித்து விட்டு நடியுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் உடனடியாக இந்த செய்தியை நிறுத்தும்படி எல்லா பத்திரிக்கைகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி அனைத்து பத்திரிக்கைகளும் செய்தியை நிறுத்தி விட்ட நிலையில், தினத்தந்தி மட்டும் செய்தியை வெளியிட்டு விட்டதால், மறுநாள் மறுப்பு செய்தியை வெளியிட்டிருந்தனர். ஆனாலும் முதல்நாள் இந்த செய்தி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.