• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜயகாந்த் பாட்டுக்கு ரசிகராக மாறிய எம்.ஜி.ஆர்: கேப்டனுக்கு அப்பவே அவ்ளோ மவுசு!

சினிமா

நீங்கள் அவரை வந்து பார்த்திருக்க வேண்டும். அப்படி வந்திருந்தால் உங்களை தான் தனது வாரிசாக அறிவித்திருப்பார் என ஜானகி அம்மாள் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது சிறப்பான நடிப்பு மட்டுமல்லாமல் தாராள குணத்திற்கும் பெயர் பெற்றவர் விஜயகாந்த். படப்பிடிப்பில் அனைவரும் ஒரே மாதிரியான சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று விருப்பபட்டு அதன்படியே அனைவருக்கும் சமமான சாப்பாடு கொடுத்த விஜயகாந்த், தன்னுடன் நடித்த சக நடிகர்கள் மட்டுமல்லாமல், எளிய மக்கள் பலருக்கும் உதவிகளை செய்துள்ளார்.

தற்போது உடல்நிலை பாதிப்பு காரணமாக திரைத்துறை மற்றும் அரசியலில் இருந்து விலகியுள்ள கேப்டன் விஜயகாந்த் குறித்து பலரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், விஜயகாந்த் நடிப்பில் ஊமை விழிகள், உழவன் மகன், கருப்பு நிலா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய இயக்குனர் அரவிந்த் ராஜ், விஜயகாந்த் நடிப்பில் எம்.ஜி.ஆருக்கு பிடித்த படம் குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஊமை விழிகள் படம் எங்களுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அந்த அளவிற்கு பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று மீண்டும் ஒரு படத்தை தொடங்கினோம். அந்த படம் தான் உழவன் மகன். இந்த படத்திற்கு முதலில் இணைந்த கைகள் என்று தலைப்பு வைத்தோம். அதன்பிறகு உழவன் மகன் என்று மாற்றினோம். இரு தலைப்பையும் அறிவிப்போம் எதற்கு அதிக வரவேற்பு இருக்கிறது என்று பார்த்துவிட்டு முடிவு செய்வோம் என்று அறிவித்தோம்.

உழவன் மகன் என்ற டைட்டில் அறிவிக்கப்பட்ட போது பல விவசாயிகள் எங்களுக்கு கடிதம் எழுதினார்கள். உழவர்கள் பற்றி படம் எடுப்பதற்கு விஜயகாந்த் தான் பொருத்தமாக இருப்பார். நீங்கள் விவசாயிகள் பற்றி எதோ சொல்ல வருகிறீர்கள். அதை விஜயகாந்த் சொன்னால் சரியாக இருக்கும். இந்த படம் எப்போது வெளியாகும் என்று கேட்டு பல கடிதங்கள் வந்தது. அதன்பிறகு உழவன் மகன் தலைப்பு முடிவு செய்தோம்.

இப்போது மகன் ரெடி யார் உழவன் என்று யோசிக்கும்போது நம்பியார் நினைவுக்கு வந்தார். அவரை சந்தித்து படத்திற்கு கமிட் செய்தோம். அதன்பிறகு நம்பியார் எப்போது போன் பேசினாலும் நான் உழவன் பேசுகிறேன். டைரக்டர் இருக்காரா என்று தான் கேட்பார். இந்த படத்தில் விஜயகாந்த் அறிமுக பாடல் காட்சி ஒன்றுக்கு 100 மாட்டு வண்டிகள் வைத்து ஷூட் செய்தோம்.

இந்த படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக விஜயகாந்த் நாங்கள் கேட்ட அத்தனையும் செய்து கொடுத்தார். படம் முடிந்து வெளியானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு விஜயகாந்த் நடிப்பில்கருப்பு நிலா என்ற ஒரு படத்தை இயக்கினேன். இந்த படத்தின் ஒரு காட்சிக்காக எம்.ஜி.ஆர் பார்வையற்றோர் பள்ளிக்கு சென்றோம். அப்போது எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார்.

நாங்கள் ஷூட்டிங் வந்திருப்பதை அறிந்த ஜானகி அம்மா விஜயகாந்தை சந்திக்க வந்தார். அப்போது அவரிடம், தம்பி நீங்க மாட்டு வண்டியில பாட்டு பாடிட்டு வருவீங்களே என்று சொன்னார். அப்போது எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது. அந்த பாட்டைத்தான் அய்யா அடிக்கடி பார்த்துக்கொண்டே இருப்பார். நீங்கள் அவரை வந்து பார்த்திருக்க வேண்டும. அப்படி வந்திருந்தால் உங்களை தான் தனது வாரிசாக அறிவித்திருப்பார்.

இந்த பையன் என்னை மாதிரியே நடிக்கிறான். உடம்பையும் என்னை மாதிரி ஃபிட்டாக வைத்திருக்கிறான் என்று சொன்னதாக ஜானகி அம்மா சொன்னார். இந்த பாடல் காட்சியில் 100 மாட்டு வண்டிகளை வைத்து படமாக்கும் போது கஷ்டப்பட்டதெல்லாம் அவர் சொன்ன வார்த்தையில் மறந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால் இந்த பாட்டுக்கு இன்ஸ்பிரேஷனே எம்.ஜி.ஆர் நடிப்பில் வந்த பாரப்பா பழனியப்பா பட்டணமாம் என்ற பாடல் தான் என அரவிந்த் ராஜ் கூறியுள்ளார்.
 

Leave a Reply