தமிழ்சினிமாவில் நெஞ்சில் நிறைந்த துணைக் கதாபாத்திரங்களின் வரிசையில்
சினிமா
தமிழ்சினிமாவில் நெஞ்சில் நிறைந்த துணைக் கதாபாத்திரங்களின் வரிசையில், காசி:நடிகர் அனுமந்து!
திரைப்படம்:நிழல் நிஜமாகிறது!
அனுமந்து எனும் இந்த நடிகரை இன்றைய தலைமுறையினர் பலபேருக்கு தெரியாது என்றே நினைக்கிறேன்.என்னுடைய சிறுவயதில் இந்த நடிகரை திரையில்(தொலைக்காட்சியில்)காணும்பொழுது பயந்திருக்கிறேன்.காரணம்,அவருடைய பச்சை நிற கண்கள் Black&white திரையில் பார்க்கும் பொழுது அச்சத்தை ஏற்படுத்தும்.
நான்,மேற்கு மாம்பலத்தில் குடியிருந்த பொழுது (2,000-ஆம் ஆண்டு)Wineshop வாசலில், இவரை அடிக்கடி பார்ப்பேன்.முழுநேர குடிகாரனாக மாறியிருந்த நேரம்.2003-ஆம் ஆண்டு சிறுநீரகக் கோளாறால் இறந்து விட்டார்.எல்லாம் குடிதந்த பரிசாகத்தான் இருக்கும்.
இப்படி பலபேர் திறமையிருந்தும் குடிப்பழக்கத்தினால் குறைந்த வயதிலேயே சினிமா உலகில் மாண்டு போயுள்ளனர்.
'நிழல் நிஜமாகிறது'திரைப்படம்தான் இவருக்கான முதல்படம் என நினைக்கிறேன்.துணைக்கதாபாத்திரம் என்றாலும் ஒரு கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரம்.
காசிதான், அவனுடைய உண்மையான பெயராக இருந்தாலும்,காது சுத்தமாக கேட்காத காரணத்தால் எல்லோரும் அவனை, 'செவுடா',என்றுதான் அழைப்பார்கள்.அவனுடைய தாய் கூட அவனை 'செவுட்டுப் பொணம்',என்றே அழைப்பாள்.இந்தத் தாயின் கதாபாத்திரம் கூட மிகுந்த சுவாரஸ்யத்துக்கு உரியது.இக் கதாபாத்திரத்தை சுந்தரி பாய் ஏற்று நடித்திருப்பார்.அதே போல் மௌலி ஏற்று நடித்திருந்த மன்மத நாயுடு கதாபாத்திரம் கூட Very interesting rare character.இக் கதாபாத்திரங்களைப் பற்றியெல்லாம் எழுதவே ஆசையா இருக்கு.இப்போ,காசிக்கு மட்டும் போவோம்.
காசி, இந்துமதி (சுமித்ரா)வீட்டு வேலைக்காரன்.சூதுவாது அறியாதவன்.இந்துமதியும் இவனை செவுடா என்றே அழைப்பாள்.
இந்துமதியின் அண்ணன்தான் வெங்கடாச்சலம்(சரத்பாபு).சரத்பாபுவின் நண்பன் சஞ்சீவி(கமல்ஹாசன்).இவன் ஒரு முற்போக்குவாதி.தன்னைச் சுற்றியுள்ளவர்களை,உற்றுக்கவனிப்பவன்.குறிப்பா விளிம்பு நிலை மக்களின் மீது அக்கறை உள்ளவன்.இந்தக் கதாபாத்திரத்தில் மிகப் பிரமாதமா நடித்திருப்பார் கமல் அவர்கள்.
சஞ்சீவி ஒரு Civil engineer.ஆறுமாதகாலம் வேலை விஷயமாக சென்னையில் தங்கியிருக்க வேண்டிய சூழல்.அதன்படி,சரத்பாபு வீட்டின் எதிரில் உள்ள நல்லம்மநாயுடு(மௌலி) வீட்டில் தங்கிக் கொண்டு சரத்பாபு வீட்டில் சாப்பிட வருவான்.அப்பொழுதுதான் இந்த காசி சஞ்சீவிக்கு அறிமுகம் ஆவான்.
காசியை எல்லோரும் செவுடா, செவுடா என அழைப்பதைக் கவனித்த சஞ்சீவி, 'ஒன் பெயர் என்னா',என்று கேட்க, 'தெரியாது',என்று சொல்வான்.'உன் அம்மா ஒன்னையை எப்படி கூப்பிடுவாங்க',என கேட்க அப்பாவியாக ,'செவுட்டுப் பொணம்னு ',கூப்பிடுவா என எவ்வித உணர்ச்சியும் இன்றி சொல்வான் காசி.சஞ்சீவி பரிதாபப்பட்டு, 'ஒங்கம்மா நீ பொறக்கும்போது பேர் வச்சிருப்பாங்க,என்னன்னு கேட்டுட்டு வா',என்பான்.
மறுநாள் வந்து, என்னோட அம்மா என் பேரு காசின்னு சொன்னா ',என்று சொல்லிவிட்டு நகர,அவனுக்கு கேட்கும்விதமாக சத்தமாக,' காசி ',என்று அழைக்க காசி நெகிழ்ந்து போய் சஞ்சீவியின் காலில் விழுவான்.முதன்முதலில் அவனுடைய பெயரை உச்சரித்து கேட்கும் பொழுது அவனுக்கு பேரானந்தமாக இருக்கும்.
காசி வேலை செய்யும் இதே வீட்டிற்கு திலகம்( ஷோபா)சமையல் வேலை செய்ய வருவாள்.
இரண்டு பேரும் வீட்டு வேலைக்கார ஜாதி என்பதால் இயல்பாகவே காசிக்கு திலகம் மீது பற்றுதல், காதல் என எல்லாமே ஊற்றெடுக்கும்.அவளுடைய பெயரைக் கூட நெஞ்சில் பச்சைக் குத்திக்கொள்கிறான்.காதலுக்கு தகுதி அந்தஸ்தெல்லாம் தெரியுமா,என்ன?
ஒருநாள்,இயல்பாக திலகம் பாத்திரம் வெளக்கிய கரிக்கையோடு அவனுடைய பனியனில் கை வைத்து சாப்பிட கூப்பிடும்பொழுது,அந்தக் கரி அவனுடைய பனியனில் அப்படியே ஒட்டிக் கொள்ளும்.அதைக்கூட பாதுகாப்பாக அவளுடைய நினைவாக வைத்துக் கொள்வான்.
ஒருநாள்,அவள் பாத்திரம் கழுவிக்கொண்டிருக்கும் பொழுது ஆசைமிகுதியில் அவளை கட்டிப்பிடித்து விடுவான்,காசி.அவள் அவனை நாயை விரட்டுவது போல் விரட்டுவாள்.
வெங்கடாச்சலம் White caller கேடி.திலகத்தை கண்டது முதல், அவளை அடையவிரும்பி ஆசைவார்த்தைகளைக் கூறி உடல்உறவு வைத்துக்கொள்கிறான்.எல்லாம் முடிந்து வெளியே வரும்பொழுது காசி பார்த்து விடுகிறான்.
நாம் எதிர்பார்த்தபடியே வெங்கடாச்சலம் அவளை ஏமாற்றுகிறான்.வெளியே சொல்லக்கூடாது என பயமுறுத்துகிறான்.
சஞ்சீவி அவளுக்கு உதவி செய்ய நினைக்கிறான்.அதுவரையில் அவளை காசியின் வீட்டில் தங்க வைக்கிறான்.
தான் நேசித்தவள் தன்னுடைய முதலாளியுடன் படுத்து வயிற்றை நிரப்பிக் கொண்டவள் என அறிந்தும், அவள் பிள்ளை பெறும்வரை அவளுடைய தாயாக இருந்து காப்பாற்றுகிறான் காசி.
மனம் திருந்தி வெங்கடாச்சலம் ஏற்றுக்கொள்ளவரும்பொழுது,திலகம் அவனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள்.
தனக்குத் தாயாகவும்,குழந்தைக்கு தகப்பானாகவும் இருந்து காப்பாற்றிய காசியையே தனது கணவனாக ஏற்றுக்கொள்கிறாள் திலகம்.
காசியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அனுமந்தின் உருவம், அப்படியொரு பொருத்தம்.அக்கதாபாத்திரத்திற்கு தனது பங்களிப்பை மிக சரியாகவே செய்திருப்பார் நடிகர் அனுமந்து.
சே மணிசேகரன்