• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இரு மடங்காகி உள்ள பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு

ஜனவரி 15 தொடங்கி 19 வரை, சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் (Davos) நகரில் உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) ஆண்டு கூட்டம் நடைபெறுகிறது.

பொருளாதார ஏற்ற இறக்கங்கள் குறித்து "இன்ஈக்வாலிட்டி இங்க்." (Inequality Inc.) எனும் பெயரில் தங்களது ஆண்டு அறிக்கையை ஆக்ஸ்ஃபேம் (Oxfam) எனும் அமைப்பு, உலக பொருளாதார மன்ற கூட்டத்திற்கு சில தினங்களுக்கு முன் வெளியிடுவது வழக்கம்.

இங்கிலாந்தை சேர்ந்த சுமார் 21 தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய அமைப்பு, ஆக்ஸ்ஃபேம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு அறிக்கையில் ஆக்ஸ்ஃபேம் தெரிவித்ததாவது:

2020க்கு பிறகு உலகின் பெரும் பணக்காரர்களில் முதல் 5 இடத்தில் உள்ளவர்கள், தங்கள் சொத்து மதிப்பை 2 மடங்கிற்கும் மேல் பெருக்கி உள்ளனர்.

அந்த 5 பேரும் $3.3 ட்ரில்லியன் மதிப்பிற்கு மேலும் பணக்காரர்களாகி உள்ளனர்.

பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault), ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos), வாரன் பஃபே (Warren Buffet), லேரி எலிசன் (Larry Ellison) மற்றும் எலான் மஸ்க் (Elon Musk) ஆகிய அந்த 5 பேரின் நிகர மதிப்பு தற்போது $869 பில்லியன் என அதிகரித்துள்ளது.

கடந்த 4 வருடங்களாக இவர்களின் சொத்து மதிப்பு, மணிக்கு சுமார் $14 மில்லியன் என அதிகரித்து வந்திருக்கிறது.

இதே காலகட்டத்தில் 5 பில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலை தொடர்ந்தால் அடுத்த 229 வருடங்களுக்கு உலகில் வறுமையை ஒழிக்க முடியாது.

இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

"பணியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பது, வரிகளை கட்டாமல் தப்பிப்பது, தனியார்மயத்தை ஊக்குவிப்பது, பருவகால மாற்றங்களை தொடர செய்வது ஆகியவற்றால் அசுரத்தனமான பணக்காரர்களை உருவாக்கத்தான் கார்ப்பரேட் அமைப்புகள் இயங்குகின்றன" என ஆக்ஸ்ஃபேம் செயல் இயக்குனர் அமிதாப் பெஹர் (Amitabh Behar) தெரிவித்தார்.

1792லிருந்து 1822 வரை இங்கிலாந்தில் வாழ்ந்த எழுத்தாளர், பெர்சி பைஷ் ஷெல்லி (Percy B. Shelley) "பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகின்றனர், ஏழைகள் மேலும் ஏழைகளாகின்றனர்" என கூறியதை ஆக்ஸ்ஃபேம் அறிக்கையுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பயனர்கள் விவாதிக்கின்றனர்.
 

Leave a Reply