• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சேரன் செய்த தரமான சம்பவம்

சினிமா

தமிழ் சினிமா தற்போது இளம் இயக்குனர்களின் கைகளுக்கு வந்தது ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையாகவே பார்க்கப்படுகிறது. ரஜினி, கமல் போன்ற மூத்த நடிகர்கள் கூட தங்களின் வெற்றிக்காக இளம் இயக்குனர்களை நம்ப ஆரம்பித்து விட்டார்கள். என்னதான் இந்த இயக்குனர்கள் எல்லாம் வித்தியாசமான கதை களங்களை கொடுத்தாலும், தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு மூத்த இயக்குனர்களின் பங்கும் இருக்க வேண்டும்.
  
அப்படிப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் தான் சேரன். பாண்டவர் பூமி, பொற்காலம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர் ஆட்டோகிராப் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர். தன்னுடைய படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் தனக்கான கோட்பாடுகளை தகர்த்து கொள்ளக்கூடாது என்பதில் ரொம்பவும் உறுதியாக இருக்கிறார்.

சேரன் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் என்னும் படத்தை இயக்கியிருந்தார். அதைத்தொடர்ந்து சமீபத்தில் தமிழ் குடிமகன் என்னும் படத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக படங்கள் இயக்காமல் இருந்த சேரன் தற்போது ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படம் தியேட்டர் ரிலீஸ் இல்லாமல் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆக இருக்கிறது. சோனி நிறுவனம் இந்த படத்தை வெளியிட இருக்கிறார்கள்.

சரத்குமார், ஆரி அர்ஜுனன், பிரசன்னா, திவ்யபாரதி என கிட்டத்தட்ட முப்பது முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். ஷூட்டிங் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுவாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு சென்சார் கட் இருப்பதில்லை. இதனாலேயே சமீபத்தில் இந்த தளங்களில் முகத்தை சுளிக்கும் அளவுக்கு எல்லாம் படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கின்றன.

சேரன் நினைத்திருந்தால் ஓடிடி ரிலீஸ் தானே என தன்னுடைய வெற்றிக்காக படத்தில் எப்படிப்பட்ட காட்சிகளை வேண்டுமானாலும் சேர்த்திருக்கலாம். ஆனால் ரசிகர்களுக்கு கண்ணியம் தவறாது ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்பதில் அவர் ரொம்பவும் உறுதியாக இருக்கிறார். குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கான படத்தை தான் சேரன் தற்போது இயக்கி வருகிறார்.

சமீபத்திய சென்சேஷனல் இயக்குனர்களாக இருக்கும் நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் சேரனிடமிருந்து இதை கற்றுக் கொள்ள வேண்டும். சமீப காலமாக வெளிவரும் இவர்களுடைய படங்கள் ரொம்பவும் வன்முறை நிறைந்ததாக இருக்கின்றன. கத்தி, துப்பாக்கி, கொலை, ரத்தம் என போர்க்களமாக தான் இவர்களுடைய பட கதைகள் இருக்கிறது. அதிலும் லோகேஷ் கனகராஜ் உளவியல் சோதனை நடத்துங்கள் என சமூக ஆர்வலர் ஒருவர் கேஸ் போட்டது எல்லாம் குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply