• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிகம் உயிரிழக்கும் ஏழைகள் - அதிர்ச்சி தரும் லண்டன் ஆய்வு

பல்வேறு உயர்கல்வி ஆராய்ச்சிகளுக்காக செயல்படும் பல்கலைக்கழகமான யுசிஎல் (UCL) எனும் யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ளது.

"ஸர்" (Sir) பட்டம் பெற்ற பேரா. மைக்கேல் மர்மாட் (Prof. Sir Michael Marmot) தலைமையில் "இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஈக்விடி" எனும் உலக மக்களின் சுகாதார ஆராய்ச்சி மையம் இங்கு செயல்படுகிறது.

இங்கிலாந்து மக்களின் வாழ்நாள் குறித்து பேரா. மைக்கேல் பல தரவுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

2011-ஆம் வருடத்திற்கு பிறகு இங்கிலாந்தில் அகாலமாக உயிரிழந்தவர்களில் பலருக்கு வறுமை, அரசின் சிக்கன நடவடிக்கைகள், கோவிட் பெருந்தொற்று ஆகியவையே மரணத்திற்கு காரணமாக இருந்தது.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏழை மக்கள் புற்று நோய், இருதய நோய்கள் மற்றும் பிற நோய்களில் இருந்து தங்களை காத்து கொள்ள முடியாமல் இறக்கின்றனர்.

2011லிருந்து 2019 வரையிலான காலத்தில் 10,62,334 பேர் சிகிச்சை பெற தேவையான பொருளாதார வசதி இல்லாததால் அகாலமாக உயிரிழந்துள்ளனர். அவர்கள் பொருளாதார ரீதியில் வளமையான 10 சதவீதம் பேர் வசிக்கும் இடங்களில் வாழ்ந்திருந்தால் அகால மரணம் ஏற்பட்டிருக்காது.

2020ல் மட்டும் 1,51,615 அகால மரணங்கள் நிகழ்ந்தன. இதில் பெரும்பாலானவை கோவிட் பெருந்தொற்றால் விளைந்தவை.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேரா. மைக்கேல் மர்மாட், "ஏழ்மையாகவும் சுகாதாரமற்றதாகவும் நம் நாடு மாறி வருகிறது. இங்கு பணக்காரகர்ளால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடிகிறது. தங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து மக்கள் கவலைப்படுகிறார்கள்; ஆனால், வசதி குறைவால் அவர்களால் தங்களை காத்து கொள்ள முடியாமல், அவர்களின் ஆயுட்காலம் குறைகிறது. இது அவர்கள் குற்றமில்லை. அரசியல்வாதிகள்தான் பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை தர வேண்டும்; ஆனால், அவர்கள் அவ்வாறு செய்வதில்லை" என தெரிவித்தார்.

"ஹெல்தி லைஃப் இயர்ஸ்" (healthy life years) எனப்படும் ஆரோக்கிய குறைபாடுகள் ஏதும் இன்றி மனிதர்கள் வாழும் காலகட்டத்தின் அளவு குறைந்து கொண்டே வருவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
 

Leave a Reply