• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சமைக்க கற்று கொள்ளுங்கள் - நிபுணர்கள் அறிவுறுத்தல்

கனடாவில் மளிகை பொருட்களின் விலை, வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதால், அங்கு உணவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

சூழ்நிலையை சமாளிக்க பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் ஆலோசனைகளை கூறி வருகின்றனர்.

கனடாவின் குயெல்ஃப் பல்கலைக்கழக (Guelph University) உணவு மற்றும் விவசாய துறை பேராசிரியர், மைக் வான் மேசோ (Mike von Massow).

அவர் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:

30 அல்லது 40 வருடங்களுக்கு முன் நாம் சமையல் கலையில் பெற்றிருந்த தேர்ச்சி, எந்த சூழலையும் சமாளிக்கும் விதமாக இருந்தது. ஆனால், அந்த பழக்கம் நம்மை விட்டு போய் விட்டது. அதனால் வாழ்க்கை கடினமாகி வருகிறது. உணவு பொருட்களை வாங்க பணம் இருந்தாலும், குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சமைக்கும் கலையை நாம் பழகி கொள்ளவில்லை. இதனால் பொருட்களின் விலை அதிகரிக்கும் போது பாதிப்பிலிருந்து தப்ப முடியாது. எங்கள் பள்ளி பருவ காலத்தில் ஒவ்வொரு மாணவ மாணவியரும் அடிப்படை சமையலில் பயிற்சி வகுப்புகளை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். அதனால் எந்த சூழலையும் நாங்கள் சமாளித்தோம்.
இவ்வாறு மேசோ கூறியுள்ளார்.

இதே கருத்தை வலியுறுத்தும் வகையில், "முன்னர் பள்ளிக்கூடங்களில் 8-ஆம் வகுப்பில் சமையல் பாடம் கட்டாயமாக இருந்தது. அந்த முறை நீக்கப்பட்டவுடன் மக்கள் சமையலையே மறந்து விட்டனர்" என டொரன்டோ பகுதியை சேர்ந்த உணவு துறை வல்லுனரான மர்லின் ஸ்மித் கூறுகிறார்.

சர்ரே (Surrey) பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான ராஜ் தந்தி எனும் பெண்மணி, "சுலபமாக கிடைப்பதால் வெளியே கிடைக்கும் உணவு வகைகளையே உண்டு வந்தோம். 2011 வருடம் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடிக்கு பிறகு வீட்டில் சமைப்பதை பழக்கமாக்கி கொள்ள வேண்டி வந்தது. பருப்பு மற்றும் பீன்ஸ் போன்றவற்றை கொண்டு பஞ்சாபி உணவு வகைகளை சமைக்க கற்று கொண்டேன். வெளியிலிருந்து உணவு வாங்கும் பழக்கத்தை படிப்படியாக குறைத்து கொண்டோம். இதனால் எங்கள் நிதி நிலைமை சீரடைந்தது. என் தாயார் மற்றும் பாட்டி நன்றாக சமைத்தனர். ஆனால், நான் அவர்களிடம் சமையல் செய்வதை கற்று கொள்ளவில்லை. அது தவறு என உணர்ந்து கொண்டேன்" என தெரிவித்தார்.

இந்தியாவிலும் உணவகங்களிலிருந்து ஆர்டர் செய்து வரவழைத்து உண்ணும் பழக்கம் அதிகமாகி வருவதால், கனடாவில் நடப்பது நமக்கு ஒரு படிப்பினை என சமூக வலைதளங்களில் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.
 

Leave a Reply