• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரபுவின் முதல் படமும் தோல்வி… 100வது படமும் தோல்வி

சினிமா

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் பிரபு நடித்த முதல் படம் மற்றும் 100வது படம் ஆகிய இரண்டுமே தோல்வி படமாக அமைந்தது. இந்த இரண்டு படங்கள் தோல்விக்கும் சிவாஜி கணேசன் தான் காரணம் என்று கூறப்பட்டாலும் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பதும் அவர் நடிக்காத கேரக்டரே இல்லை என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தான் ஹிந்தியில் உருவான ‘காளி சரண்’ என்ற திரைப்படத்தை தமிழில் ‘சங்கிலி’ என்ற பெயரில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது.

சிவாஜி கணேசன் இரண்டு வேடங்களில் நடித்த இந்த படத்தில் ஸ்ரீபிரியா நாயகியாக நடித்திருந்தார். நம்பியார் வில்லனாக நடித்திருந்தார். ஹிந்தியில் இந்த படம் தோல்வி அடைந்த நிலையில் இந்த படத்தை எதற்காக தமிழில் ரீமேக் செய்தார்கள் என்பதுதான் பலருடைய கேள்வியாக இருந்தது.

கடத்தல் கும்பல் தலைவனை பிடிப்பதற்காக டிஎஸ்பி சிவாஜி முயற்சி செய்வார். அப்போது அவர் கொல்லப்படுவார். இதனை அடுத்து அவரைப் போலவே உருவம் உள்ள சிறையில் இருக்கும் ஒரு ரெளடியை டிஎஸ்பியாக நடிக்க வைத்து குற்றவாளியை பிடிப்பார்கள். கிட்டத்தட்ட இந்த படத்தின் உல்டா கதைதான் பில்லா என்பது குறிப்பிடத்தக்கது. டிஎஸ்பி, ரெளடி என இரண்டு கேரக்டர்களில் சிவாஜி நடித்திருப்பார்.

இந்த படத்தில் ராஜாளி என்ற முக்கிய கேரக்டரில் பிரபு நடித்தார். இதுதான் அவருக்கு முதல் படம். பிரபு தனது கேரக்டரை உள்வாங்கி முதல் படத்திலேயே சூப்பராக நடித்திருப்பார். சிவாஜிகணேசனுடன் அவர் மோதும் காட்சி அதன் பின்னர் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளும் காட்சிகளில் அவர் சிறப்பாக நடித்திருப்பார். அதேபோல் கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜிக்கு உதவும் வகையில் அவரது கேரக்டர் அமைந்திருக்கும்.

இந்த படத்தை சிவாஜி கணேசனின் பல வெற்றி படங்களை இயக்கிய சி.வி.ராஜேந்திரன் இயக்கி இருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரே நல்ல விஷயம் ‘நல்லோர்கள் வாழ்வை காக்க’ என்ற பாடல் தான். இன்றும் புத்தாண்டு தினத்தன்று இந்த பாடல் அனைத்து இடங்களிலும் ஒலிக்கும். இந்த படம் 1982ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதேபோல் பிரபுவின் நூறாவது படமாக அமைந்தது ‘ராஜகுமாரன்’. பிரபுவின் முதல் படத்தை கதை கேட்டு தேர்வு செய்த சிவாஜிதான் 100வது படத்தையும் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

பிரபுவின் நூறாவது படமாக ‘நாட்டாமை’ என்ற படத்தை எடுக்கதான் முதலில் முடிவு செய்யப்பட்டது. கே.எஸ்.ரவிகுமார் சிவாஜியிடம் கதை சொல்லி கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. ஆனால் சிவாஜி கணேசன் அந்த கதை சரியில்லை என்று கூறிவிட்டு ராஜகுமாரன் கதையை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

ராஜகுமாரன் படத்தில் மீனா, நதியா உள்பட பல பிரபலங்கள் நடித்தும் படம் தோல்வி அடைந்தது. சிவாஜி கணேசன் மட்டும் நாட்டாமை படத்தை பிரபுவின் நூறாவது படமாக தேர்வு செய்திருந்தால் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அந்த படம் அமைந்திருக்கும்.

‘நாட்டாமை’ படத்தில் பின்னாளில் சரத்குமார் நடித்தார். தமிழ் திரை உலகின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக நாட்டாமை படம் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தேன்மொழி

Leave a Reply