• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெள்ளமாக வரும் அகதிகளை தடுக்கும் கவசம் - புது சட்டம் குறித்து மேக்ரான்

பல ஆண்டுகளாக அல்ஜீரியா, மொராக்கோ, போர்ச்சுகல், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்குள் சட்டவிரோத அகதிகளாக தரைவழியாகவும், கடல் வழியாகவும் நீண்ட தூர ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு மக்கள் உள்ளே நுழைவது தொடர்கதையாகி வருகிறது.

சமீப சில வருடங்களாக பிரான்ஸில் இவ்வாறு உள்ளே நுழையும் அகதிகளால் பல்வேறு உள்நாட்டு சிக்கல்கள் எழுந்தன. கட்டுக்கடங்காமல் அகதிகள் நுழைவதை தடுக்கும் விதமாக சட்டம் இயற்ற வேண்டும் என அந்நாட்டு அரசியல் தலைவர்கள் விவாதித்து வந்தனர்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டிற்கு வரும் அகதிகள் குறித்த புலம் பெயர்வோர் சட்டத்தில் கடுமையான மாற்றங்களை கொண்டு வரும் வகையில் மசோதாவை வெற்றிகரமாக தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவை பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரானின் ரெனய்ஸான்ஸ் கட்சி (Renaissance party) மற்றும் எதிர்கட்சி தலைவரும் தீவிர வலதுசாரி சிந்தனையாளருமான மரின் லெ பென் (Marine Le Pen) சார்ந்த நேஷனல் ரேலி (National Rally) ஆகிய இரு கட்சிகளுமே ஒருமித்து கொண்டு வந்திருக்கின்றன.

மேக்ரானின் கட்சிக்குள்ளேயே இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர் இதனை பொருட்படுத்தவில்லை.

விரைவில் சட்ட அந்தஸ்து பெற உள்ள இந்த மசோதாவின்படி புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரை கொண்டு வருவது கடினமாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதும் தாமதமாகும்.

குடிமகன்கள் வேறு, அகதிகள் வேறு என பாகுபாடு காட்டும் இதன்படி சட்டபூர்வமாக குடியேறுவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதை கடினமாகி உள்ளது.

மரின் லெ பென் வரவிருக்கும் புதிய சட்டத்தை, தங்கள் சித்தாந்தத்திற்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய மேக்ரான், "நாட்டில் புலம் பெயர்பவர்களால் பிரச்சனை இருப்பது உண்மைதான். இதனால் உள்நாட்டில் அமைதியின்மை தோன்ற கூடிய நிலை இருந்தது. அதனை தடுக்க வேண்டியது அரசின் கடமை. வெள்ளம் போல் உள்ளே நுழையும் அகதிகளை தடுக்கும் கவசமாக இந்த சட்டம் அமையும்" என தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் அகதிகளுக்கு உறுப்பினர் நாடுகளின் எல்லைக்கருகே மையம் அமைக்கவும், நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படும் அகதிகளை உடனுக்குடன் அவரவர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பவும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகள் ஒரு ஒப்பந்தத்தை சில தினங்களுக்கு முன் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

2027ல் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அகதிகள் பிரச்சனை வாக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாக இருக்கும் என மேக்ரான் கருதுவதால் தன் நாட்டு மக்களை ஈர்க்கும் வகையில் விரைவாக இந்த சட்டத்தை கொண்டு வர முயல்கிறார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
 

Leave a Reply