• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நைஸாக ஏமாற்றிய நிறுவனம் - நீதிமன்றம் விதித்த அபராதம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சான் பிரான்சிஸ்கோ நகரை மையமாக கொண்டு இயங்கும் வாடகை விடுதிகள் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதள நிறுவனம், ஏர்பிஎன்பி (Airbnb).

2008ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், உலகெங்கும் வீடுகள், அபார்ட்மென்ட்கள், மற்றும் பயணியர் விடுதிகளை தங்குவதற்காக தேடும் பயனர்களுக்கு அவை குறித்த தகவல்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. தங்கள் இடங்களை வாடகைக்கு விட விரும்புபவர்கள் ஏர்பிஎன்பியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில நாட்களுக்கு தங்க விரும்புபவர்கள் ஏர்பிஎன்பி (Airbnb) மூலம் அந்த இடங்களை முன்பதிவு செய்து உபயோகிக்க முடியும்.

ஆஸ்திரேலியாவிலும் இந்நிறுவனத்தில் இணையதள வழியாக பதிவு செய்து தங்கள் இடங்களை வாடகைக்கு விடுகிறார்கள். அவற்றை பயன்படுத்த டாலர்களில் ஏர்பிஎன்பி கட்டணம் வசூலித்து வந்தது.

ஒரு சில இடங்கள் குறித்த வாடகை கட்டணம் பயனாளிகளுக்கு டாலர் முறையில் வசூலிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்நிறுவன இணையதளத்தில் டாலருக்கான குறியீடு தெரிந்ததே தவிர அது ஆஸ்திரேலிய டாலரா அல்லது அமெரிக்க டாலரா என்பதை குறிப்பிடவில்லை.

இதனால், மதிப்பில் குறைந்த ஆஸ்திரேலிய டாலரில் கட்டணம் இருக்கும் என பதிவு செய்த பல பயனாளிகள் அதிக மதிப்புடைய அமெரிக்க டாலரில் கட்டணம் செலுத்தும்படி ஆனது.

இதையடுத்து, ஏர்பிஎன்பி நிறுவனத்தின் மீது ஆஸ்திரேலிய மத்திய நீதிமன்றத்தில், நுகர்வோர்களுக்கான அரசாங்கத்தின் "ஆஸ்திரேலிய வர்த்தக போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம்" வழக்கு தொடுத்தது. தங்கள் தரப்பில் தவறு நடந்திருப்பதை அந்நிறுவனம் ஒத்து கொண்டது.

2018 ஜனவரி மாதத்திலிருந்து 2021 ஆகஸ்ட் மாதம் வரையான காலகட்டத்தில் சுமார் 63,000 வாடிக்கையாளர்களுக்கு தவறான தகவல் தந்து அதிக கட்டணம் வசூலித்ததற்காக நீதிமன்றம் 15 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை அபராதமாக விதித்துள்ளது. தனது தவறை ஒத்து கொண்ட ஏர்பிஎன்பி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு தரவும் சம்மதித்துள்ளது.

தற்போது 1 அமெரிக்க டாலர் இந்திய ரூபாயில் 83 எனவும், 1 ஆஸ்திரேலிய டாலர் இந்திய ரூபாயில் 56 எனவும் மதிப்பிடப்பட்டு உலகளவில் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply