• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் - கொலராடோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கடந்த முறை நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான போட்டியில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டார். ஏற்கனவே அதிபர் பதவியில் இருந்து 2-வது முறையாக போட்டியிட்ட அவர், ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார்.

இருந்த போதிலும் டொனால்டு தனது தோல்வியை ஏற்க மறுத்து வந்தார். அவரது ஆதரவாளர்களும் டொனால்டு டிரம்ப் தோல்வியை ஏற்க மறுத்தனர். மேலும், அமெரிக்க பாராளுமன்றத்தில் நுழைந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் டொனால்டு டிரம்பிற்கு பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வகையில் கொலராடோவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்க தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவில், டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், குடியரசு கட்சி சார்பில் யார் வேட்பாளர் என்பதற்கான தேர்தல் நடைபெறும்போது, வாக்குச்சீட்டில் அவரது பெயர் இடம் பெறக்கூடாது. ஒருவேளை பெயர் இடம் பெற்றாலும் அவருக்கு வாக்களித்திருந்தால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனத் தெரிவித்துள்ளது.

இருந்தபோதிலும் அதிபருக்கான முக்கியமான தேர்தலில் தடைவிதிக்கப்படவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்துள்ள டொனால்டு தரப்பினர், மேல்முறையீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேல்முறையீடு செய்யும் வகையில் இந்த தீர்ப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply