• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீரற்ற காலநிலை  - முல்லைத்தீவு மாவட்டம் கடுமையாகப் பாதிப்பு

இலங்கை

வடமாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையினால் முல்லைத்தீவு மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இந்த மாவட்டத்தில் மாத்திரம் 2,113 குடும்பங்களை சேர்ந்த 6,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 333 குடும்பங்களை சேர்ந்த 1,076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி, கருவேலன்கண்டல், இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், கூழாமுறிப்பு உள்ளிட்ட ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 592 குடும்பங்களை சேர்ந்த 1,748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு, சிலாவத்தை, செல்வபுரம், வற்றாப்பளை, தண்ணிமுறிப்பு, முள்ளியவளை தெற்கு, கொக்குத்தொடுவாய் வடக்கு, செம்மலை, மற்றும் உப்புமாவெளி உள்ளிட்ட கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 450 குடும்பங்களை சேர்ந்த 1,366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அணிஞ்சியன்குளம், உயிலங்குளம், ஆலங்குளம், மல்லாவி, யோகபுரம் கிழக்கு, அமைதிபுரம், புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி, திருநகர் உள்ளிட்;ட கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 251 குடும்பங்களை சேர்ந்த 765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு மேற்கு, தேவிபுரம், மாணிக்கபுரம், உடையார்கட்டு வடக்கு, உடையார்கட்டு தெற்கு மற்றும் வள்ளிபுனம் மன்னாகண்டல் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 472 குடும்பங்களை சேர்ந்த 1,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 15 குடும்பங்களை சேர்ந்த 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் 7 இடைத்தங்கல் முகாம்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த நிலைமை ஓரளவு குறைந்து வருகின்ற நிலையில் தற்போது 2 இடைத்தங்கல் முகாம்களில் 176 குடும்பங்களை சேர்ந்த 524 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply