வாழ்த்துரை வழங்க வருகைதரும் கலைஞானி கமல்ஹாசன்
சினிமா
மகா கவிதை
வெளியீட்டு விழாவில்
வாழ்த்துரை வழங்க வருகைதரும்
கலைஞானி
கமல்ஹாசனைச் சந்தித்து
அழைப்பிதழும் நூலும் வழங்கினேன்
எனக்கும் அவருக்கும்
இடையிலிருந்த நாற்காலியில்
42ஆண்டு நினைவுகள்
அமர்ந்திருந்தன
கலை அரசியல் மதம் என்று
தவளைக்கல்லாய்த் தாவித்தாவி
எண்ணூர்
எண்ணெய்ப் பிசுக்கில்
இடறி நின்றது உரையாடல்
குடிதண்ணீர்
எண்ணெய் ஆவதும்
எண்ணெய்
தண்ணீரின் ஆடையாவதும்
காலங்காலமாய்க்
கழுவப்படாத
கண்ணீர்ப் பிசுக்கில்
எண்ணெய்ப் பிசுக்கும்
ஏறி நிற்பதும்
மீனென்ற
வேட்டைப் பொருளும்
கொக்கென்ற
வேட்டையாடு பொருளும்
சேர்ந்து செத்து மிதப்பதும்
நதி இறங்க
வழியில்லாத கடலில்
எண்ணெய் இறங்குவதும்
உழைக்கும் மக்கள்
பிழைக்க வழியின்றிப்
பெருந்துயர் கொள்வதும்
எத்துணை கொடுமையென்று
சோகம் பகிர்ந்தோம்
‘இதற்கு யார் பொறுப்பு’
என்றார் கமல்
‘லாபம் ஈட்டும்
நிறுவனம்’ என்றேன்
காஃபி கொடுத்தார்
பாதிக்குமேல் என்னால்
பருகமுடியவில்லை