• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விவரிக்கும் ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள்

ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தினர். இரண்டு நிமிடத்திற்குள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர். கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதில் சிறு குழந்தைகள் உள்பட 84 வயது முதியோர் வரை அடங்குவர்.

46 நாட்களுக்கு மேல் சண்டை நடைபெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அந்த போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

முதல் நான்கு நாட்களில் 50 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஹமாஸ் அமைப்பினரால் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை தெரிந்து கொள்ள செய்தி நிறுவனங்கள் முயற்சி செய்தன.

ஆனால், மருத்துவமனைகளுக்கு தகவலை பரிமாறிக் கொள்ளவதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தகவல் கசிந்துள்ளது. வடக்கு காசாவில் பிடிக்கப்பட்ட தாய்லாந்தை சேர்ந்த 17 பேர் ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் உள்ள அதிகாரி மூலம் பிணைக்கைதிகள் எதிர்கொண்ட இன்னல்கள் தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு மிகவும் குறைந்த ஊட்டச்சத்து குறைந்த உணவுகளே கொடுக்கப்பட்டடுள்ளத. மேலும், கொஞ்சமாக அரிசி உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, ஃபவா பீன்ஸ், சில நேரங்களில் பிட்டாவுடன் உப்பு கலந்த சீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து மற்ற ஏதும் வழங்கப்படவில்லை. காய்கறிகள், முட்டை போன்ற உணவுகள் வழங்கவில்லை.

பலர் தங்களுடைய எடையில் 10 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் குறைந்துள்ளனர். அவர்களுக்கு ஒளி (வெளிச்சம்) காட்டப்படவில்லை. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே வெளிச்சம் காட்டப்பட்டுள்ளது.

தங்களது தகவலை பரிமாறிக்கொள்ள பேனா அல்லது பென்சில் கேட்டபோது, அதற்கு ஹமாஸ் அமைப்பினர் அனுமதி அளிக்கவில்லை. எழுத்து மூலம் தகவலை பரிமாற்றம் செய்யக்கூடும் என பயந்ததால் அனுமதிக்கவில்லை. தொலைக்காட்சி, வாசிப்பு தொடர்பானதுக்கும் அனுமதிக்கவில்லை. ஒருவர் மூலம் ஒருவர் என்ற வகையில் தகவலை பரிமாறிக் கொள்ள அனுமதித்துள்ளனர். முதியவர்கள் தூங்குவதற்கு சிரமப்பட்டுள்ளனர். சேரில் இருந்தவாறு தூங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இன்னல்களை சந்தித்ததாக மருத்துவமனை அதிகாரி தகவலை பகிர்ந்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோர் விடுவிக்கப்பட்ட பிறகு தங்களது தாயாரை சந்திக்கும் மகிழ்ச்சியில் வந்தபோது, ஹமாஸ் தாக்குதலின்போது உயிரிழந்ததாக அவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் மனவேதனை அடைந்தனர்.
 

Leave a Reply