• Welcome to TamilsGuide
செய்திகள் 1

14 வயதில் அறிமுகம்.. 16 வயதில் தேசிய விருது.. 22 வயதில் முடிந்த வாழ்க்கை.. புகழின் உச்சம் சென்ற நடிகை..

சினிமா

14 வயதில் திரை உலகில் நடிகையாகி 16 வயதில் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று, 22 வயதில் விபத்து ஒன்றில் மறைந்த நடிகை மோனிஷா உன்னி குறித்து இன்றைய கட்டுரையில் பார்ப்போம்.

நடிகை மோனிஷா உன்னி கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவரது தந்தை பெங்களூரில் தொழில் செய்து வந்ததால் அவர் சிறு வயதில் இருந்தே பெங்களூரில் தான் வளர்ந்தார். பெங்களூரில்தான் அவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார்.

மோனிஷாவின் தாயார் ஸ்ரீதேவி ஒரு நடன கலைஞர் என்பதால் தாயாரையே குருவாக கொண்டு அவர் நடனம் பயின்றார். ஒன்பது வயதில் அவரது முதல் நடன அரங்கேற்றமும் நடந்தது.

இந்த நிலையில் தான் மலையாள எழுத்தாளரான வாசுதேவன் நாயர் என்பவர் இவரது குடும்ப நண்பராக இருந்த நிலையில் அவருடைய உதவியால் சினிமாவில் அறிமுகமானார். 

முதன்முதலாக அவர் தமிழில் ஒரு குறும்படத்தில் நடித்த நிலையில் மலையாள திரைப்படமான ‘நகக்‌ஷதங்கள்’ என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் மிக அருமையாக நடித்ததை அடுத்து அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

இதன் பிறகு தமிழில் ‘பூக்கள் விடும் தூது’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். ஹரிஹரன், ஸ்ரீவித்யா, கவுண்டமணி, ஜனகராஜ், செந்தில், வெண்ணிறை ஆடை மூர்த்தி உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தின் திரைக்கதையை டி.ராஜேந்தர் எழுதியிருந்தார். ஸ்ரீதர் ராஜன் என்பவர் இயக்கி இருந்தார்.

இந்த படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவருக்கு தமிழிலும் படங்கள் கிடைக்க ஆரம்பித்தன. தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்த தொடங்கினார்.

குறிப்பாக தமிழில் சத்யராஜ் நடித்த திராவிடன் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன் பின் கார்த்திக்குடன் நடித்த ‘உன்னை நினைச்சேன் பாட்டுபடிச்சேன்’ படம்தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற ‘என்னை தொட்டு அள்ளி கொண்ட’ என்ற எஸ்பிபி சுவர்ணலதா பாடிய பாட்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானது.

இதனை அடுத்து ஒரு சில மலையாள படங்களில் நடித்த நடிகை மோனிஷா மூன்றாவது கண் என்ற திகில் படத்தில் நடித்தார். இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் உருவான இந்த படம் தான் மோனிஷாவின் கடைசி படம். அவரது மறைவிற்கு பின்னரே இந்த படம் வெளியானது.

மலையாள திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பிற்காக நடிகை மோனிஷா காரில் சென்று கொண்டிருந்தபோது 1992ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் மோனிஷாவின் தாயார் ஸ்ரீதேவி படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோனிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது.

14 வயதில் நடிகையாகி, பதினாறு வயதில் தேசிய விருது பெற்று, 22 வயதில் தனது வாழ்வை முடித்துக் கொண்ட மோனிஷாவின் முடிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசிய விருது மற்றும் நாட்டியத்திற்கான உயரிய கெளசிக விருது பெற்ற மோனிஷா சினிமா துறையில் மிகப்பெரிய நடிகையாக வருவார் என்று திரை உலகினர் கணித்திருந்த நிலையில் அவரது வாழ்வு சொற்ப நாட்களிலேயே முடிந்துவிட்டது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

Leave a Reply