எக்ஸ்-ன் விளம்பர வருவாய் காசா, இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும்- எலான் மஸ்க்
ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களை சுட்டுத்தள்ளினர். மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். ஐந்து நிமிடத்திற்குள் 5 ஆயிரம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காசாவின் வடக்குப் பகுதி சீர்குலைந்துள்ளது. மேலும், அல்-ஷிபா உள்ளிட்ட முக்கியமான மருத்துவமனைகள் எரிபொருள் தட்டுப்பாட்டால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகளும் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில் நான்கு நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முன்வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து உலக கோடீஸ்வரரும், எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், எக்ஸ் வலைத்தளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம், போரில் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.