• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சொல்ல போதுமான வார்த்தைகள் இல்லை- சந்தோஷ் நாராயணன் நெகிழ்ச்சி

சினிமா

'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டி சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், நேரிலும் அவர்களை சந்தித்து வாழ்த்துகளை பகிர்ந்தார்.

இந்நிலையில் ரஜினி குறித்து சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். அதில், "எல்லோரும் வியந்து நோக்கும் ஒருவரிடம் இருந்து மனமார்ந்த பாராட்டு பெறுவது என்பது கிடைத்தற்கரிய பேறு. எமது அருமைத் 'தலைவர்', சூப்பர் ஸ்டாரிடம் இருந்து இன்று நாம் அப்பேற்றைப் பெற்று அகமகிழ்ந்து, உளம் நெகிழ்ந்து நிற்கிறோம்.

இப்பாராட்டு எம்மை மேன்மேலும் கடினமாக உழைக்கவும் இன்னும் சிறந்த படைப்புகளை உருவாக்கவும் உந்துதலாகவும் உறுதுணையாகவும் நிற்கின்றது. சொல்லப் போதுமான வார்த்தைகள் இல்லை, எனினும் சுருக்கமாகவும் உருக்கமாகவும் சொல்கிறோம், "நன்றிகள் கோடி, தலைவரே" என்று பதிவிட்டுள்ளார்.
 

Leave a Reply