• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காசா மீது இஸ்ரேல் குண்டு மழை- ஒரே நாளில் 704 பேர் பலி

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு கடந்த 7-ந்தேதி தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல், காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று 19-வது நாளாக தாக்குதல் நடந்து வருகிறது.

இதற்கிடையே காசா மீது இடைவிடாத தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்தது. அதன்படி இஸ்ரேல் தனது வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இஸ்ரேல் தாக்குதலில் 704 பேர் பலியானார்கள். இதுகுறித்து பாலஸ்தீன அதிகாரிகள் கூறும்போது, காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 704 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது" என்றார்.

ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் மூலம் குண்டு மழை பொழிந்து வருகிறது. நேற்று 400-க்கும் மேற்பட்ட ஹமாஸ் இலக்குகளை தாக்கியதாகவும், ஏராளமான ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இதற்கிடையே காசாவின் சுகாதார அமைச்சகம் கூறும்போது, இஸ்ரேலின் தாக்குதலில் காசா பகுதியில் 2360 குழந்தைகள் உள்பட 5791 பேர் பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.

காசாவில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகி உள்ளன. இடி பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

இஸ்ரேல் தாக்குதல்களால் காசாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே எரி பொருள் தீர்ந்து விட்டதால் காசாவில் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கியுள்ளன.

இதனால் சிகிச்சை பெறுபவர்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதனால் காசாவுக்குள் எரி பொருளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

அதே போல் காசாவில் தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.

Leave a Reply