• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெருந்தோட்டங்களில் கைவிடப்பட்டுள்ள காணிகள் குறித்த விசேட அறிவிப்பு

இலங்கை

பெருந்தோட்ட நிறுவனங்களினால் கைவிடப்பட்டுள்ள காணிகளை அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு பயிர் செய்வதற்கு வழங்கத் தேவையான சட்டத் திருத்தங்களை உடனடியாகத் தயாரிக்குமாறு நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான செயலற்றுகை அறிக்கை மற்றும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் இடம்பெற்ற குழுக் கூட்டத்திலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்தின் கூட்டுத்தாபனங்கள், சபைகள், பணியகங்கள் மற்றும் அதிகாரசபைகள் உள்ளிட்ட நிறுவங்களின் இது வரை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படாத 2012 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகளை நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உரிய நிறுவனங்களுக்கு பரிந்துரை விடுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைக்கு அமைய ஆண்டறிக்கைகள் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் உரிய நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளை விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பெருந்தோட்ட நிறுவனங்களினால் கைவிடப்பட்டுள்ள பல ஏக்கர்கள் காணிகளை அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு வழங்க தேவையான சட்டத் திருத்தங்களை உடனடியாகத் தயாரிக்குமாறும் இதன்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான புதிய சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தற்போதைய தொழில் போக்குகளுக்குப் பொருத்தமான வகையில் புதிய 4 பட்டப்படிப்புகள் மற்றும் பல்வேறு பாடநெறிகளை இதன்மூலம் அறிமுகப்படுத்த எதிரிபார்ப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் குறிக்கோளுக்கும் நோக்கத்துக்கும் பொருத்தமான வகையில் இந்த நடவடிக்கை இடம்பெற வேண்டும் என குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட ஆலோசனை வழங்கியுள்ளார்.
 

Leave a Reply