• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் மனைவியை கொன்ற கணவன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

இலங்கை

யாழில் மனைவி தவறான தொடர்பை தனது சகோதரருடன் வைத்திருந்ததை அறிந்து ஆத்திரமடைந்து இரண்டு பேரையும் தாக்கி கொலை செய்தேன் என கைதான சந்தேக நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

யாழ் - நாவற்குழி ஐயனார் கோயிலடியில் இன்றைய தினம் (16-10-2023) காலை இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து வீட்டில் கணவன் காணாத நிலையில் பொலிஸாரின் சந்தேகம் வலுத்தது.

குடும்ப தகராறில் கணவரால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதிய பொலிஸார் கணவரை தேடி தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

யாழ் கச்சேரிக்கு சமீபத்தில் முச்சக்கரவண்டியில் சந்தேகநபர் தப்பிக்க முற்பட்ட வேளையில் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைதான சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனையடுத்து, சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் "தான் மனைவியை தாக்கியதாகவும் உயிரிழந்தது தனக்கு தெரியாது" என சந்தேக நபர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், "மனைவி தவறான தொடர்பை தனது சகோதரருடன் வைத்திருந்ததை அறிந்து கோபமடைந்ததாலே இருவரையும் தாக்கினேன்" எனவும் தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர் ஏற்கனவே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதுடன் வேறு சில குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளவராகவும் கருதப்படுகிறார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பு தொடர்பான விபரங்கள் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை மற்றும் சட்ட மருத்துவ அறிக்கை மேற்கொண்டதன் பின்னரே தெரியவரும்.

சந்தேக நபரின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று (15-10-2023) சகோதரரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

எமது விசாரணைகள் நிறைவுற்றதும் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply