• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி சர்ச்சைக்கு இதுதான் காரணம் - லீக் ஆன லெட்டர்

சினிமா

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் கடந்த 10-ந் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை ஆன்லைனில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதையொட்டி நிகழ்ச்சி நடந்த அன்று மைதானத்துக்கு ஏராளமானோர் வாகனங்களில் குடும்பத்துடன் திரண்டு வந்தனர்.

முன்னேற்பாடுகள் சரிவர செய்யப்படாத காரணத்தால் குளறுபடியாகி போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் டிக்கெட் எடுத்து நிகழ்ச்சியை காண வந்த ஏராளமானோர் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாமல் குழந்தைகளுடன் நெரிசலில் சிக்கி தவித்தனர். இந்த நெரிசலில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனமும் சிக்கியது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏராளமான ரசிகர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும், ஏ.ஆர்.ரகுமானையும் விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். இந்த சம்பவத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் மன்னிப்பு கேட்டதுடன் நிகழ்ச்சியை காண முடியாமல் ஏமாந்து சென்ற ரசிகர்கள் டிக்கெட்டை இமெயிலில் அனுப்ப கூறியும், அதை பரிசீலனை செய்து அவர்களுக்கு டிக்கெட்டுக்குரிய பணத்தை திரும்ப தருவதாகவும் கூறி இருந்தார்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் இருபதாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வாங்கிய நிலையில் 41,000 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளதால் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிகேட்டு ஏற்பாட்டாளர்கள் வழங்கியுள்ள கடிதத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும் இதனால் 20 ஆயிரம் பேர் மட்டும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் வேலையில் ஈடுபடவுள்ளதாகவும் காவல் துறை இந்த நிகழ்ச்சிக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், மேலும் டிக்கெட் விற்பனை செய்தது குறித்து எந்த தகவலும் தெரிவிக்காததால் குறைவான காவலர்கள் பணியாற்றியதால் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் காவல்துறையினர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அறிக்கை சமர்பிக்குமாறு கேட்டுள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை நடக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply